
(சென்னையில் இருந்து செய்தியாளர் வேதா)
‘அயலகத் தமிழர் நாள் மாநாடு-2026’நேற்று சென்னையில் தொடங்கியது. இன்றைய இரண்டாம் நாள் நிகழ்ச்சி ‘தமிழால் இணைவோம்;
தரணியில் உயர்வோம்’ என்னும் கருப் பொருளுடன் தொடங்கியது என்று மகேஸ்வரி அரசேந்திரன் தெரிவித்தார்.
இதே வரிகளுடன் தொடங்கிய பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி தொடங்கியது;
தமிழ்நாட்டு முதலமைச்சரும் திராவிட ஆட்சியின் நாயகருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வருகையுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மலேசியப் பேராளர் களில் ஒருவரும் ‘ஹொப்புல்’ தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியருமான திருமதி மகேஸ்வரி அரசேந்திரன், ‘இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பது பாரிய அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தமிழ்ச் சமுதாயத்தின் ஒற்றுமையையும் தமிழ் மொழியின் மேன்மையையும் பறைசாற்றும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழர்கள் தங்களின் பூர்வீக நிலத்திலிருந்து பல்வேறு சூழல் காரணமாக உலகெங்கும் புலம்பெயர்ந்து இன்று லட்சக்கணக்கில் பல்கிப் பெருகி வாழ்கின்றனர்.
அவர்களை தாய் மண்ணுடன் இணைத்து தமிழர்தம் பண்பாடு, கலாச்சாரக் கூறுகள், தாய்மொழியின் சிறப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, அவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும் சிந்தாமல் சிதறாமல் உலக அளவில் எடுத்து செல்வதற்கான இலக்கை நோக்கி இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக மகேஸ்வரி மேலும் தெரிவித்தார்.



