
வந்த வேலையை விட்டுவிட்டு பந்தல் காலைப் பிடித்துநின்ற தமிழ் அடியார்களில் வீரமாமுனிவர் குறிப்பிடத்தக்கவர்.
இத்தாலிய நாட்டில் பிறந்த இவர் இயேசு சபை மூலம் கிருத்துவ சமயத்தை பரப்புவதற்காக தமிழ் நிலத்திற்கு வந்தார்! வந்தவர் தமிழை கற்க முனைந்தார். அப்படி முனைந்தவர், முனைந்து கொண்டே இருந்தார்.
தமிழின் இனிமையிலும் சுவையிலும் மூழ்கித் திளைத்தார். தமிழ் மொழியின் சிறப்பை மேனாட்டாரும் அறிந்துகொள்ளும் வண்ணம் திருக்குறள், நன்னூல் தேவாரம், திருப்புகழ் உள்ளிட்ட நூல்களை இலத்தின் மொழியில் மொழிபெயர்த்தார்.
கான்ஸ்டாண்டின் பெஸ்கி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழின் தொன்மையை மேன்மேலும் அறிய ஓலைச் சுவடிகளை தேடித்தேடி சேகரித்ததால் இவரை சுவடி தேடும் சாமியார் என்றும் அழைத்தனர்.

தமிழுக்கும் தமிழருக்கும் அகராதி என்னும் பாங்கை அறிமுகப்படுத்தியவர், இவர்தான். தமிழ் இலத்தீன், தமிழ் போர்த்துகல் ஆகிய இரு அகராதிகளை இவர் உருவாக்கினார்.
பெரும்பாலும் பாநடையில் இருந்த தமிழ் இலக்கியத்தை உரைநடையில் பதிப்பிட்ட இலக்கிய முதல்வரும் இவர்தான்; அதைப்போல எழுத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டவரும் இவர்தான்.
வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களை உரைநடையில் இயற்றினார் வீரமாமுனிவர். இயேசு பெருமானின் புகழ்பாடும்படி 36 படலங்களைக் கொண்டு இவர் இயற்றிய தேம்பாவணி என்ற நூலும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தமிழ் பெருமகனாரை குமாரி வாஞ்சையுடன் நினைவு கூறுகிறாள்.
வாழ்க வீரமாமுனிவரின் புகழ்!!
அமெரிக்க நாணயத் தாட்களில் இடம்பெற்றிருக்கும் ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்காவின் முதல் அதிபராக பொறுப்பு ஏற்ற நாளும் இன்றைய நாள்தான்!!


