
ரந்தாவ், ஜுலை 31-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் களம் இனறு நள்ளிரவுடன் நிறைவுபெற இருக்கும் நிலையில் பிரச்சார களம் பரபரக்கிறது.
தேசிய முன்னணியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவிற்கு தலைமையேற்றுள்ள வெளியுறவு அமைச்சரும் முன்னாள் மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசான், இறுதி நேர பிரச்சாரத்தில் இறங்கினார்.
தனது சொந்தக் கோட்டையான ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ளவும், மாநிலத்தில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வதை உறுதி செய்யவும் இடைவிடாமல் வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
அரசியல் அரங்கில் ‘தொக் மாட்’ என்று அன்போடு அழைக்கப்படும் முகமட் ஹசான், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைத்தன்மையை பாதுகாக்க, பாரம்பரிய மலாய் தலைமைத்துவக் கோட்பாடு மீண்டும் வலுப்பெற வேண்டும் என பிரச்சார மேடைகளில் மிக உணர்ச்சிப்பொங்க முழங்கி வருகிறார்.
தற்போதைய பக்காத்தான் ஆட்சிக்கு முந்தைய தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு வழங்கிய நிலையான ஆட்சியையும், உள்கட்டமைப்பு வளர்ச்சிகளையும் முன்வைத்து, மலாய் சமூகத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டும் இறுதி வியூகத்தில் அவர் களம் இறங்கினார்.
அதேவேளையில், மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரான சீன, இந்திய சமூகங்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அவர் பேட்டி அளித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் தேசிய முன்னணி வைத்துள்ள தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு குறித்து, மலாய் அல்லாத சமூகத்தினர் எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று முகமட் ஹசான் உறுதியளித்துள்ளார்.
அனைத்து இன மக்களின் உரிமைகளும் நல்வாழ்வும் தேசிய முன்னணியின் ஆட்சியில் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தேசிய முன்னணியின் அசைக்க முடியாத தூணாகக் கருதப்படும் முகமட் ஹசானின் இந்த அதிரடி இறுதிக்கட்டப் பிரச்சாரம், ரந்தாவ் தொகுதியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நெகிரி செம்பிலானின் தேர்தல் முடிவுகளையும் தலைகீழாக மாற்றப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


