
மலேசிய முத்தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ‘முத்தமிழ் விழா ’26′ இன்று 12.9.2026, சனிக்கிழமை மாலை 6:00 மணி அளவில், கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன், தான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது என்று முத்தமிழ்ச் சங்க செயலாளர் கரு.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனரும் முத்தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகருமான முத்தமிழ்க்காவலர், தமிழவேள் மதிப்புமிகு டத்தோ பா.சகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

இந்த விழாவில் தமிழ்நாடு மற்றும் நம் நாட்டின் இலக்கியவாதிகள் மிகச்சிறந்த இலக்கிய உரைகளை வழங்கவிருக்கின்றனர். மேலும் இந்த விழாவில் தமிழ்நாடு, திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
தவிர, தமிழ்நாட்டு கலை மகள் பருவ இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனும் இதில் கலந்து கொண்டு ‘பாரதியின் அகன்ற பார்வை’ என்னும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறார். தேசிய நில நிதி கூட்டுறவு சங்க இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுகதைகள் தொகுக்கப்பட்ட ‘மலேசிய சிறுகதைகள்’ நூல் வெளியீடும் இவ்விழாவில் இடம்பெறுகிறது.

இந்த விழாவில் இலக்கிய உரை வழங்கவிருக்கும் சிறப்பு உரையாளர்களுக்கு மலேசிய நாட்டின் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சிறப்பு இலக்கிய விருதை வழங்கிவிருக்கிறது.
விழாவில் பத்துமலை கவிஞர் வைரகவி ‘மலேசியத் தமிழர்கள் எந்னும் தலைப்பில் கவிதை வழங்குவார்.
காவல் துறை மேனாள் ஆணையாளர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் ‘தமிழர் வாழ்வியலில் இலக்கிய மாண்புகள்’ என்னும் தலைப்பிலும் தமிழ்நாட்டு பேராசிரியர் முனைவர் ஞானஜோதி சரவணன் ‘தமிழர்தம் அகவாழ்வு’ என்னும் தலைப்பிலும் தமிழ்நாட்டு பேராசிரியர் முனைவர் கா.வேலம்மாள் ‘திருக்குறள் காமத்துப்பால்-வாழ்வியல் மருந்து என்னும் தலைப்பிலும் பேராசிரியர் முனைவர் ரவி ‘உலக வரலாற்றில் தமிழ்ப்பண்பாடு-ஒரு தொல்லியல் பார்வை என்னும் தலைப்பிலும் கலைஞர் கரு. கார்த்திக் ‘கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்’ என்னும் தலைப்பிலும் உரையாற்ற இருப்பதாக பன்னீர் செல்வன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தமிழ் இலக்கிய மாண்பு-மரபு, தமிழ்ச் சமுதாய வேர்கள், வரலாறு உள்ளிட்ட கூறுகளை புதுப்பிக்கும் நோக்கில் நடைபெற உள்ள இந்த இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அனைவரையும் அழைப்பதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ள கரு. பன்னீர்செல்வம் மேல் விவரத்திற்கு தன்னை (012 3056799) அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


