
பக்கத்தான் கூட்டணி தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அமைந்ததுமுதல் 15ஆவது நாடாளுமன்றத்தில் அடிப்படை மனித உரிமைமீது, ஓர் இனம்புரியாத அமைதி நிலவுகிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி தேசியத் தலைவரும் சரித்திர இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்
மறுமலர்ச்சி குறித்து ஜசெக, பிகேஆர் கட்சிகள், ஒரு காலத்தில் வாய்கிழிய பேசின.
இந்தக் கட்சியினர் அதிகாரக் கட்டிலில் ஒட்டிக்கொண்ட பின் தங்களின் வாக்குறுதிகளை எல்லாம் அடியோடு மறந்துவிட்டு, மனித உரிமை தொடர்பான அம்சங்களில் பொம்மைகளைப் போல வாய்மூடி கிடக்கின்றனர்.
நலிந்த இந்தியர்களுக்கான வாய்ப்பின்மை, காவல் நிலைய மரணங்கள், பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமையில் ஏற்படும் தடைக்கல், போலீஸ் அத்துமீறல், வாக்கு அளித்தபடி வளர்ச்சி இல்லாதது, அதற்கு கூறப்படும் நொண்டி சாக்கு குறித்தெல்லாம் நாடாளுமன்றத்திலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட அரசாங்கத்திலும் சரி, ஒரு தரப்பினரும் மூச்சு விடுவதில்லை.
கண்ணை மூடிக்கொண்டு அடிபணியும் கலாச்சாரத்திலும் அரசாங்கத்தில் கிடைக்கும் வளமான வாய்ப்புகளை தற்காக்கும் தன்மையிலும் மூழ்கிக் கிடக்கின்றனர்;
தவிர சமூகத்தில் ஒரு தரப்பினரை மட்டும் இலக்கு வைத்து திட்டங்கள் வரைவது குறித்தும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
இவை யாவும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றால் ஒரு மூன்றாவது வலிமையான மாற்று சக்தி தேவை. அந்த சக்தி உண்மைக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் சக்தியாக அமைய வேண்டும்.
இதன் அடிப்படையில் மலேசிய முன்னேற்ற கட்சி எம் ஏ பி, மறுமலர்ச்சிமீது அக்கறை கொண்டுள்ள கட்சி- இயக்கம் எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து ஜனநாயக கடமையாற்ற தயாராக இருக்கிறது என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொன் வேதமூர்த்தி மேலும் குறிப்ப குறிப்பிட்டுள்ளார்.


