பிரதமருக்கு எம்.ஏ.பி. தலைவர் பொன் வேதமூர்த்தி கடிதம்

கோலாலம்பூர், ஏப்.19:
தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் ஆலயம் தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளியிடும்படியும் ஆலயங்கள் குறித்து குறிப்பாக கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் ஆலயம் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் உள்ள அவதூறான பதிவுகளை நீக்கும்படியும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு நேற்று, ஏப்ரல் 18ஆம் நாள் அனுப்பியுள்ள கடிதத்தில் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
பேராக் ஆட்சியாளர் மாட்சிமைக்குரிய சுல்தான் நஸ்ரின், மற்றவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தும் தரப்பினர் பற்றி, ஏமாற்றம் தெரிவித்திருப்பது, நாட்டில் அமைதியை விரும்புவோரைக் கவலைகொள்ளச் செய்துள்ளது. அனைவரும் சிந்தித்து, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மாட்சிமைக்குரிய சுல்தான் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டிருப்பது காலத்தால் பொருத்தமானது.

காலனி ஆட்சிக் காலத்தில் ஆலயங்கள் எழுப்பப்பட்ட இடங்களுக்கு அப்போதைய ஆட்சியாளர்கள் தலைமையேற்ற சட்டமன்ற கூட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரலாறெல்லாம் தெரியாமல் கருத்து தெரிவிக்-கின்றனர். இதையெல்லாம் சரிசெய்ய, 2025 மார்ச் 25-ஆம் நாள் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் தலைவாருமான பொன். வேதமூர்த்தி பிரதமரை வலியுறுத்தி உள்ளார்.
சமூக வலைதளத்தில் வெறுப்புக் கருததையும் வன்முறை வெளிப்பாட்டையும் தெரிவிக்கும் தரப்பினருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
முகநூல் சமூக வலைதளத்தை நிருவகிக்கும் Meta மற்றும் Waze போன்ற நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான அவதூறு கருத்துக்களை வெளியிடாமல் தவிர்க்கும்படி தகவல் அமைச்சும் அமைச்சின்கீழ் இயங்கும் தகவல் பல்லூடக ஆணையமும் ஆவண செய்ய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பாரம்பரிய தலங்கள், கலாச்சார பரிமாற்ற மையங்களாக விளங்கும் சரித்திர ஆலயங்கள் குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மூலம் மேற்கொள்ள பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள பொன்.வேதமூர்த்தி, நீதி எளிதில் கிட்டாது என்றாலும் அதற்காக போராடாமல் இருக்க முடியாதென்றும் உண்மை எப்பொழுதும் வாக்குகளைக் கொண்டுவராது என்றாலும் அது தேசத்தைக் கட்டியெழுப்ப வல்லது என்றும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.


