
மலேசியாவில் சைபர் மிரட்டல், அவதூறு, மோசடிகள் போன்றவற்றைக் கவனிக்க டிக் டாக் உத்தரவாதம் அளிக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ள டிக் டாக் செயலியின் நிர்வாகத்தினர் தகவல் தொடர்பு அமைச்சகம், மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம், பேங் நெகாரா ஆகியவற்றுடன் இணைந்து ஒத்துழைப்பை ஏற்படுத்த விருப்பம் கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
சமூக நல்லிணக்கம் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் டிக் டாக் தளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அச்செயலியின் நிர்வாகத்தின் இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளுக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை செயல்படுத்துவது குறித்தும் பிரதமர் கருத்துரைத்தார்.
இந்த நடவடிக்கைக்கு டிக் டாக் போன்ற தளங்கள் உரிமம் பெறவும், பயனர் பாதுகாப்பிற்கான கடுமையான வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் தேவைப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப, மலேசியாவில் மேலும் முதலீடு செய்வதற்கான டிக் டாக்கின் அர்ப்பணிப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


