
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை பதவி விலகக்கோரும் பேரணி சுதந்திர சதுக்கத்தை நோக்கி முன்னேற ஆயத்தமாகி வருகிறது
‘அன்வார் பதவி விலகு’ பேரணி தொடர்பில் விடியற் காலையிலிருந்து ஐந்து இடங்களில் கட்டங்கட்டமாக பங்கேற்பாளர்கள் திரள ஆரம்பித்தனர்.
சுதந்திர சதுக்கத்தில் ஒன்று திரளும் முன்பாக தேசிய பள்ளிவாசல், செண்ட்ரல் மார்க்கெட், சுல்தான் அப்துல் சமாட் ஜாமேக் பள்ளிவாசல், கம்போங் பாரு பள்ளிவாசல், SOGO வணிகவளாகம் ஆகிய முனையங்களில் பங்கேற்பாளர்கள் திரள்வதற்கு முன்பாகவே ‘Turun Anwar’ என்று பொறிக்கப்பட்ட ‘டீ’ சட்டைகளை விற்கத் தொடங்கினர்.
பாஸ் கட்சி ஏற்பாட்டிலும் பெர்சத்து கட்சி ஆதரவுடனும் மலாய் அரசுசாரா அமைப்புகள் முன்னெடுக்கின்ற இந்தப் பேரணி, நகர்ப்புற உருமாற்றச் சட்டத்திற்கு(URA) எதிராகத்தான் முன்னதாக திட்டமிடப்பட்டது; பின்னர் இது, அன்வார் பதவி விலகக்கோரும் பேரணியாக மாற்றப்பட்டது.

இன்றைய ‘Turun Anwar’ பேரணியில் முன்னாள் பிரதமர்கள் துன் மகாதீர், தான்ஸ்ரீ முகைதீன் யாசின் ஆகியோருடன் மேநாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிமும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் திரள்வர் என்று
‘Turun Anwar’ செயலக துணைத் தலைவர் ஹில்மான் ஈதாம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இவர், கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினரும் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவருமாவர்.
ஆனால் காவல்துறை சார்பில் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் பேர்வரை திரளக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பேரணிகளுக்கு ஜனநாயகக் கட்டமைப்பில் இடம் இருப்பதால், காவல்துறையினர் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளதாக அவரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ரூல் அபைடாஹ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
கோலாலம்பூரில் ஜலான் துன் பேராக், லெபோ அம்பாங், துங்கு அப்துல் ரகுமான் சாலை, ராஜா லாவுட் சாலை, ஜலான் பார்லிமென்ட், ஜலான் ஹிஷாமுடின், ஜலான் ராஜா, Lebuh Pasar Besar, Jalan Hang Kasturi, Jalan Kinabalu(சிகாம்புட் சுற்று வளைவில் இருந்து டத்தோ ஓன் சுற்று வளைவு வரை), ஜலான் மகாராஜா லேலா உள்ளிட்ட சாலைகளில் சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்து அவ்வப்பொழுது மாற்றி அமைக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர இடைக்கால போலீஸ் தலைவர் யூசுஃப் ஜான் முகமட் தெரிவித்திருக்கிறார்.


