Saturday, June 6, 2026

13-ஆவது மலேசியத் திட்டம்: இந்திய சமூகத்திற்கு துரோகம், அவமதிப்பு ! -பொன் .வேதமூர்த்தி கடும் கண்டனம் !!

பிரதமர் அறிவித்துள்ள 13-ஆவது மலேசியத் திட்டம், இந்திய சமூகத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் மீண்டும் அவமதித்துள்ளது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன் .வேதமூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளிப்படுத்தி உள்ள சில உள்ளடக்கம் தெளிவாக இல்லை; ஏமாற்றும் தன்மை கொண்ட சில கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாமல் சில இந்திய தலைவர்கள் இதற்கு பாராட்டு தெரிவிப்பது அவர்களின் அலட்சியப் போக்கினை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

மலாய் சமூகத்திற்கான சிறப்பு சலுகை, திட்டங்கள் குறித்து தான் ஒருபோதும் கேள்வி எழுப்புவதில்லை; ஆட்சேபம் தெரிவிப்பதில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்,

பொருளாதார ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்த இதுபோன்ற நடவடிக்கை அவசியம் என்பதையும் நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.

அதேவேளை ஒரு சமூகத்திற்கு சிறப்பு சலுகைகளை அளிக்கின்ற அதேவேளை, அதே ஏழ்மையில் உழலுகின்ற மற்றொரு சமூகத்தை காலமெல்லாம் புறக்கணிப்பது என்ன நியாயம்?

குறிப்பாக சீன சமூகம் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்னவென்றால், ஏழை இந்தியர்கள் இதேபோன்ற வளர்ச்சித் திட்டங்களிலிருந்து தொடர்ந்து விலக்கப்படுவதும், அதேநேரத்தில் சமூக உருமாற்றத் திட்டம் என்ற பெயரில் கடனுதவியை மட்டுமே வழங்குவது, இந்திய சமூகத்தை ஏமாற்றும் போக்கு என்றும் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் 13 வது மலேசியத் திட்டம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இனம், மதம் கடந்து அனைத்து சமூகத்தின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் உதவி வழங்கும் பொருளாதார மறுமலர்ச்சியை விரும்புவதாகக் கூறும் பிரதமர் அன்வார், நாட்டின் ஏழ்மையான சமூகங்களில் இந்தியர்களும் அடங்குவர் என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிலையில், மலேசிய இந்தியர்கள் ஏழைச் சமூகத்தினர் என்பதை உலக வங்கியும் ஒப்புக்கொண்ட நிலையில், வெறும் அமானா இக்தியார் மற்றும் தெக்குன் கடன்களை மட்டுமே இந்தியர்களுக்கு அன்வார் வழங்குகிறார். இது அவர் கொடுத்த வாக்குறுதியைப் புறக்கணித்து இந்திய சமூகத்தை புறக்கணிக்கின்ற அப்பட்டமான துரோகம் என்று பொன்.வேதமூர்த்தி சாடியுள்ளார்.
சுருங்கசொன்னால் பிரதமரின் திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் அல்ல; அவை சமூக உருமாற்ற உத்தரவாதம் இல்லாத கடன் தொகுப்புகள் மட்டுமே; இதனால் ஏழ்மை நிலையில் இருக்கும் இந்திய சமூகம், பொருளாதார மீட்சி அடைவதற்குப் பதிலாக, மேலும் மேலும் கடனை சுமக்கின்ற நிலைக்கு தள்ளிவிடும்;

காலமெல்லாம் கடன் திட்டங்களையே முன்வைப்பது நேர்மையற்றது; கொடூரமானது.

எல்லாவற்றுக்கும் மேலாக,இனம் சார்ந்த கொள்கையிலிருந்து விலகிச் செல்வதாகக் கூறுவது அப்பட்டமான ஏமாற்றுவேலை என்றும் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் உண்மையிலேயே தேவையின் அடிப்படையில் உதவுவதில் நம்பிக்கை கொண்டிருந்தால், இந்திய ஏழைகளுக்கான விகிதாச்சார மானியமும் நிதி உதவியும் எங்கே?

இந்திய சமூகத்திற்கு நியாயமான பங்காக தங்கள் கட்சியும் நானும் தொடர்ந்து முன்மொழிந்த குறைந்தபட்சம் 1% ஒதுக்கீட்டு நிதியாக, 5 ஆண்டு காலத்திற்கு ஒதுக்கும்படி கேட்ட 25 பில்லியன் வெள்ளி எங்கே? பொருளாதார, நீதி, சீர்திருத்தத்திற்கான உறுதிப்பாடு எங்கே என்று பொன்.வேதமூர்த்தி கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்

அன்வாரின் வெற்று வார்த்தைகள் இந்திய சமூகத்திற்கு தொடர்ந்து செய்யும் துரோகச்செயலேத் தவிர வேறில்லை. ஒரு சமூகத்திற்கு இன அடிப்படையிலான நன்மைகளை அமைதியாக பராமரிக்கும் அதேவேளை, மற்றொரு சமூகத்திற்கு அவற்றை மறுக்கும் அன்வாருககு, இனங்களைக் கடந்து அனைவருக்கும் பொதுவானத் திட்டங்களை வகுப்பதாக சொல்லிக்கொள்ளஎந்தத் தகுதியும் இல்லை என்று ஹிண்ட்ராப் எழுச்சி இயக்கத்தின் தேசியத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி மேலும் சாடினார்.

இந்திய சமூகத்திற்கு வெற்று வார்த்தைகள் இனியும் தேவையில்லை. மாறாக ஆக்கப்பூர்வமான உருமாற்றத் திட்டங்களும், சமூக மேம்பாட்டு வரைவுத்திட்டங்களும் உண்மையான கொள்கையும் முறையான ஒதுக்கீடுமேத் தேவை.

இந்திய சமூகத்திற்குரிய மாண்பையும் மரியாதையையும் அளிக்காமல் தொடர்ந்து எலும்புத் துண்டுகளை வீசியபடி, அரசியல் அடிமைதனத்திற்குள் தள்ளி அரசியல் அரங்கில் பகடைக்காய்களாக நடத்தப்படுவதை நாங்கள் இனியும் பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்று பொன்.வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் அன்வாரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை