
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலாயா மாநில கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தாமான் மலூரி தீ புரோன் போய்ஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
செபூத்தே தொகுதி கெஅடிலான் தலைவர் மற்றும் விலாயா மாநில கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தார்.
செனட்டர் இராசையா, செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன், நகைச்சுவை நடிகர் சத்யா உட்பட விலாயா மாநிலத்தில் உள்ள கெஅடிலான் தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

டத்தோ அஸ்மான், ஓம்ஸ் தியாகராஜன், பண்டார் துன் ரசாக் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் ஜோனதன் வேலா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தீபாவளி விருந்து நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு செய்து வரும் உதவிகள் குறித்து டத்தோ அஸ்மான் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
தமிழ் பள்ளிகள், கோவில்கள், இந்திய தொழில் முனைவர்கள், மாணவர்கள் உட்பட பல திட்டங்கள் மூலம் இந்திய சமுதாயத்திற்கு மடானி அரசாங்கம் உதவிகளை செய்து வருகிறது என்று அவர் சொன்னார்.

ஆடல் பாடல் இன்னிசையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவையான உணவு பரிமாறப்பட்டது.
தகவல்; செ வே முத்தமிழ் மன்னன், தலைவர், தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்


