
கோலாலம்பூர்,
செராஸ் மூன்றரை மைல் ஸ்ரீ பினாங்கு அடுக்கக (மலிவு விலை) வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயம் நாட்டின் பன்முக தன்மைக்கு ஏற்ப சமய சமூக நல்லிணக்கத்தை பேணி வருகிறது என்று மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜூன் ஏழாம் நாள் இந்த ஆலயத்தில் மூன்றாவது திருக்குட நன்னீராட்டு திருவிழா நடைபெற இருப்பதன் தொடர்பில் இன்று தொடக்க விழா கலச பூஜையுடன் தொடங்கியபோது, அதில் கலந்து கொண்ட விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

பல இன மக்களும் சுற்றி வாழ்கின்ற அடுக்ககங்கள் இருக்கின்ற இந்த எளிய வலாகத்தின் நடுவே எவ்வித சலசலப்பும் சிக்கலும் இன்றி அமைதியான முறையில் இந்த வழிபாட்டுத் தலத்தை இப்படி நடத்தி வருகின்ற டேவிட்டிருக்கும் அவரின் தலைமையிலான குழுவினருக்கும் பாராட்டு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
விக்னேஸ்வரனுடன் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எண்ட்ரூ, கூட்டரசு வளாக மாநிலத் தலைவர் டத்தோ சைமன் ராஜா, துணைத் தலைவர் பாலகுமாரன், வழக்கறிஞர் ராஜசேகரன் உள்ளிட்ட மஇகாவினரும் இதில் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்ச்சி நித்திய பூஜையுடன் தொடங்கி எஜமான சங்கல்பம், பூர்வாங்க பிரசன்ன விக்னேஸ்வர பூசை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூசை, முகூர்த்தக் கால் நடுதல், கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி, வாஸ்து சாந்தி பிரவேச பலி உள்ளிட்ட சடங்குகள் தொடர்ந்த நிலையில் கலசங்களுக்கு பூசை நடைபெற்று மரியாதை செய்யப்பட்டு கோபுரத்தின் உச்சியில் அந்தந்த உபயதாரர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

ஆலயத் தலைவர் கோயில் நிர்வாகத்தினருக்கும் மஇகா தலைவர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கும் மரியாதை செய்தார்.


