
மலேசிய இந்திய சமுதாயத்தில் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன்.
1995 பொதுத் தேர்தல் சமயத்தில் துங்கு ரசாலி தலைமையிவான ‘செமாங்காட்-46’, பாஸ் கட்சிகளுடன் இணைந்து களம் கண்டது ஐ.பி.எஃப். அந்தக் காலக்கட்டத்தில் தேசிய அளவில் பரபரப்புடன் விளங்கிய கட்சி ஐபிஎஃப்.
கடந்த 30 ஆண்டு காலத்தில் இந்தக் கட்சி பலவிதமான அரசியல் மாற்றங்களைக் கண்டு, ஏராளமான ஏற்ற இறக்கத்தையும் எதிர்கொண்டு இப்பொழுது டத்தோ லோகா தலைமையில் சிறப்புடன் செயல்படுகிறது.
அதன் நிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ பண்டிதன், அவரின் தளபதிகளில் ஒருவரான டத்தோ மு.சம்பந்தன் இருவரும் கட்சியை நல்ல முறையில் வழிநடத்தி மறைந்துவிட்ட நிலையில், இவர்களுக்கு இடையில் புவான்ஸ்ரீ ஜெயா பண்டிதனும் ஐ.பி.எஃப்.-ஐ வழி நடத்தினார்.

பின்னர் அவரும் ஒதுங்கிக் கொண்ட நிலையில், புதிய தலைமுறை இளைஞர்களை இணைத்துக் கொண்டு இந்தக் கட்சி இப்பொழுது செயல்படுகிறது.
டத்தோ லோகநாதன் துரைசாமி தலைமையில் தற்பொழுது சிறப்பாக செயல்படுகின்ற ஐ.பி.எஃப் கட்சியின் 33ஆவது பொது பேரவை நாளை ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14-ஆம் நாள் காலை 8:00 முதல் மாலை 4:00 மணிவரை செமிஞி ‘ஏகோஹில் கிளாப் 360’ என்னும் இடத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தப் பேரவையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி சிறப்பு வருகை புரிய உள்ளாரென கட்சியின் செயலாளர் மோகன் முத்துசாமி தெரிவித்தார்.

ஐ.பி.எஃப் கட்சி தேசிய முன்னணியின் தோழமைக் கட்சியாக அண்மைக் காலமாக தொடர்கின்ற நிலையில், உறுப்பு கட்சியாக உருமாற பல ஆண்டுகளாக போராடி வருகிறது.
அந்த வகையில், தற்போது தேசிய முன்னணியில் இருந்து விலகலாமா வேண்டாமா என்று நிலையோடு மதில் மேல் பூனையாக ம.இ.கா.வும் – ம.சீ.ச.வும் இருக்கின்றன.
இந்த நிலையில் தேசிய முன்னணியின் தலைமை, இந்த நேரத்தில் ஐபிஎப் கட்சியை சற்று அனுசரணையுடன் அணுகுகிறது

ம.இ.கா.வின் தேசிய பேராளர் மாநாடு அண்மையில் நடைபெற்றபோது தேசிய முன்னணித் தலைவர் உட்பட பலருக்கும் அழைப்பு இல்லை; அதைப்போல ம.சீ.ச. மாநாட்டிற்கு கூட தேசிய முன்னணியின் பெரிய அண்ணன் அழைக்கப்பட்டதாக தெரியவில்லை
இந்தச் சூழலில், ஐ.பி.எஃப், மாநாட்டை தொடக்கிவைக்க தேசிய முன்னணித் தலைவர் வருவது, அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய அரசியலில் இரண்டாம் இடத்தை நீண்ட காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளவரும் முன்னாள் துணைப் பிரதமரும் இந்நாள் துணைப் பிரதமருமான ஜாஹிட் ஹமிடி, ஐபிஎப் மாநாட்டை நாளை தொடக்கி வைத்து உரையாற்றும் பொழுது, ஒருவேளை ம.இ.கா., ம.சு.ச. கட்சிகளுக்கு அதிர்ச்சி தரக்கூடிய அறிவிப்பை வெளியிட்டாலும் வியப்பதற்கு இல்லை.


