
அன்பின் மகத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இயேசு நாதரின் பிறந்தநாளை நினைவுகூரும் இந்தப் புனித கிறிஸ்துமஸ் நாளில் உங்கள் அனைவரின் வாழ்க்கையில் அன்பும், கருணையும், அமைதியும், ஒற்றுமையும் , நிரம்பி விளங்க வேண்டும்.
மனித நேயம், சகோதரத்துவம், தியாகம் போன்ற உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துச் சொன்ன இயேசுவின் போதனைகள், இன்றைய காலக்கட்டத்தில் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் ஓர் ஆன்மீகப் பிணைப்பாகவும் திகழ்கிறது.
மதம், இனம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து, அன்பின் செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்மஸ் விளங்குகிறது.
அந்த வகையில், பல இன மக்கள் இணைந்து வாழும் நம் மலேசிய நாட்டில், ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் மேலும் வலுப்பெற இந்த நாள் ஓர் இனிய நினைவூட்டலாக அமைகிறது.
டிசம்பர் மாதம் ஆண்டின் நிறைவுக் கட்டம் என்பதால் கொண்டாட்டம், விடுமுறை, குடும்பச் சந்திப்புகள், உறவுகளோடு ஒன்றுகூடல் என மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கிறது.
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதும் நீண்ட நாட்களாகக் காணாத உறவுகளைச் சந்திப்பதும் இந்த மாதத்தின் தனிச்சிறப்பாகும்.
கிறிஸ்மஸ் தினத்தைத் தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டை உலக மக்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாடும் ஒரு புதிய தொடக்கத்தின் சின்னமாகத் திகழ்கிறது.
கடந்த கால அனுபவத்தில் இருந்து பாடம் கற்று, புதிய நம்பிக்கை, புதிய இலக்கு, புதிய கனவுடன் முன்னேறும் ஒரு வாய்ப்பாக இந்தப் புத்தாண்டு அமையட்டும் என டத்தோஸ்ரீ மு.சரவணன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.


