
புத்ரா ஜெயா, டிச 26- ‘1எம்டிபி’ வழக்கில் மேனாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு 20 ஆண்டு சிறைவாசம் இருக்க வேண்டும் என்று அரசு தரப்பு எதிர்பார்க்கிறது.
நஜீப், ‘எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கு தொடர்பில் தற்பொழுது அனுபவித்து வரும் சிறைவாசம் முடிந்த பிறகு இந்த 20 ஆண்டு சிறைவாசம் தொடங்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பு எதிர்பார்க்கிறது என்று அரசு துணை வழக்கறிஞர் அகமட் அக்ரஹாரம் காணிப் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கு தொடர்பில் மதிப்பிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனை, கூட்டரசு மன்னிப்பு வாரியத்தால் ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தற்பொழுது நஜீப் அனுபவித்து வரும் இந்த சிறைவாசம் 2028 ஆம் ஆண்டில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்பில் இன்று காலையில் புத்ரா ஜெயா நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ என்பவர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் பினாமியாக செயல்பட்டதற்கான மிகவலுவான ஆதாரங்கள் இருப்பதாக உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
டத்தோஸ்ரீ நஜிப் சம்பந்தப்பட்ட ‘1 எம்டிபி’ வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுவேரா,
ஜோ லோவின் அனைத்து அறிவுறுத்தல்களும் முன்னாள் பிரதமரிடமிருந்து நேரடியாக வந்தது அரசுத் தரப்பு வழக்கறிஞர்களால் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சொன்னார்
தப்பியோடிய தொழிலதிபரின் மின்னஞ்சல், கலந்துரையாடல்களில் எழுப்பப்பட்ட ஐயம் யாவும் அரசத் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இது பின்னர் ‘பெட்ரோசவுதி’ கூட்டு முயற்சி, எரிசக்தி கையகப்படுத்துதல், நிதி மேலாண்மை போன்ற பெரிய பரிவர்த்தனைகளுக்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, தீர்ப்பை முழுமையாக வாசிக்க குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் தேவை என்று செகுவேரா கூறினார்.
தற்பொழுது 72 வயதான நஜிப் மீது 2018 ஆம் ஆண்டில் நான்கு அதிகார அத்துமீறல் குற்றச்சாட்டுகள், 21 பணமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.


