
அருள்மிகு பத்துமலை திருத்தல வளாகத்தில் சுத்தத்தையும் தூய்மையையும் பராமரிப்பதில் பக்தப் பெருமக்களுக்கும் கடமையும் பொறுப்பும் உண்டு என்று ஆலய அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் தெரிவித்தார்.
பத்துமலை திருத்தல வளாகத்திற்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால், இங்கு தூய்மையைப் பேண அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதை இங்கு வருகின்ற பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுப் பயணியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நேரில் காணலாம்.
அப்படி இருந்தும் ஏதோ ஒருசில வேளைகளில் குப்பைத் தென்படுவது உண்மைதான்.
ஒருசில பக்தர்கள் தங்கள் கையில் இருக்கும் தாள், நெகிழிப்பை, பெண்கள் சூடியிருக்கும் மலர், சிறுவர்கள் சாப்பிடும் உணவுப் பொட்டலத் தாட்கள் போன்றவை தவறி கீழே விழுவதுண்டு.
அவ்வாறு குப்பைகள் விழுவதைக் காணும் பணியாளர்கள் அடுத்த சுற்று வரும்பொழுது அவற்றை சுத்தம் செய்கின்றனர். காலையில் ஆலயவளாகம் திறந்தது முதல் இரவு சாத்தப்படும் வரை இந்த தூய்மைப் பணி இடைவிடாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையே, குரங்குகள் சாப்பிடும் வாழைப்பழத்தின் தோல், தேங்காய் ஓடு போன்றவையும் ஒரு சிக்கலாக இருக்கிறது.
எல்லாவற்றையும் சமாளித்துதான் ஆலயத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் அதிக அக்கறையோடும் முனைப்போடும் செயல்பட்டு வருகிறோம்.
இதை யெல்லாம கருத்தில் கொள்ளாத சிலர் பத்துமலை ஆலய வளாகத்தில் குப்பை கிடப்பதாக சமூக வலைத்தலங்களில் செய்தி பரப்பி வருவது சரியா என்பதை சம்பந்தப்பட்டவர்களே எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அருள்மிகு திருமுருகன் சிலை நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று காலை முதல் விழா நடைபெறுவதன் தொடர்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சிவக்குமார் தெரிவித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கு வருகின்ற பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணியர் உள்ளிட்ட அன்பர்களும் கையில் இருக்கும் குப்பையை அந்தந்த இடத்தில் அப்படியே கீழேப் போடாமல், அருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டால் நல்லது என்பதை கருத்தில் கொண்டால் நல்லது என்று அவர் மேலும் சொன்னார்.


