
பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50 இந்து கோவில்களுக்கு 4 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இன்று அறிவித்தார்.
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
அந்த வகையில் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு மேல் பத்துமலை வளாகத்தில் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

தவிர, சமய இசை நிகழ்ச்சியும் இடம் பெறும்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி உட்பட சிலாங்கூர் மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு 8.00 மணிக்கு மேல் சிறப்பு வருகை புரிகிறார்கள்.
இந்த விழாவில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரிக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்படும் வேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இவ்வாண்டும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50 இந்து கோவில்களுக்கு குறைந்தது 4 லட்சம் வெள்ளி மானியம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வாக இது விளங்கும் என்று அவர் சொன்னார்.
இன்று செலாயாங் நகராண்மைக் கழக மண்டபத்தில் நகராண்மைக் கழக அதிகாரிகளுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.


