
சரவாக் மாநில அரசு சமீபத்தில் செயல்படுத்தியுள்ள முன்னேற்றமான முயற்சியை முன்மாதிரியாகக் கொண்டு, மலேசிய ஒற்றுமை அரசும் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி வழங்க வேண்டும் என்று மஇகா தேசிய உதவி தலைவர்களில் ஒருவரான டத்தோ தா முருகையா வலியுறுத்தியுள்ளார்.
சரவாக் மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
“இதன் தொடர்ச்சியாக, தற்போது பயன்பாட்டில் உள்ள பள்ளிப் பேருந்துகளை உடனடியாக பயன்படுத்தும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்”.
இந்த முன்மொழிவின்கீழ், ஒவ்வொரு மாணவருக்குமான போக்குவரத்து செலவையும் அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், இதன் மூலம் பெற்றோரின் நிதிச் சுமை குறையும்.
இந்த அணுகுமுறை மாணவர்கள், அவர்களின் பெற்றோர், பள்ளிப் பேருந்து இயக்குநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, தொடர்ச்சியாக நிலைநிறுத்தவும் உதவும் என்று உறுதியாக நம்புவதாக முருகையா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பள்ளி விடுமுறைக் காலங்களில் வருமான இழப்பை சந்திக்கும் பேருந்து இயக்குநர்களுக்கு இது பெரிதும் ஆதரவாகவும் இருக்கும்.
மேலும், இலவச பள்ளி போக்குவரத்துத் திட்டம், காலை நேர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு செல்லும் அவசரம் மற்றும் மன அழுத்தத்தைத் தணிக்கவும் உதவும்.
பள்ளி தொடங்கும் நேரத்திலும் பள்ளி முடியும் நேரத்திலும் பள்ளி வளாகங்களில் ஏற்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கூடுகையை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும்.
சரவாக் மாநில அரசு புதிய பேருந்துகளை வழங்கி இந்த முயற்சியை செயல்படுத்த முடிந்தால், ஏற்கனவே உள்ள வசதி மற்றும் பேருந்து இயக்குநர்களைப் பயன்படுத்தி மாற்று முறையில் இதைச் செயல்படுத்த மத்திய அரசு முடியாதென்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை.
இதற்குத் தேவையானது உறுதியான அரசியல் மனப்பாங்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கையும் மட்டுமே.
எனவே, கல்வி அமைச்சகம் நிதி அமைச்சகம் மற்றும் போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து, முழுமையான, நிலைத்த மற்றும் செயல்திறன் கொண்ட தேசிய அளவில் கல்வி- சமூகம்- பொருளாதாரம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த இந்தக் கல்வி நலத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று முருகையா மேலும் வலியுறுத்தி உள்ளார்.
இந்த முயற்சி பொதுநலனுக்கான முதலீடாகவும், உள்ளூர் தொழில்துறையின் நிலைத்தன்மைக்கான ஆதரவாகவும், நாட்டின் கல்வி எதிர்காலத்திற்கான முக்கியமான அடிப்படையாகவும் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


