
பிரதமர் அன்வார், இந்திய சமூகத்திற்கு குறிப்பாக இந்துக்களுக்கு இழைக்கும் அநீதியும் வஞ்சகமும் மன்னிக்க முடியாதது. மக்களின் வழிபாட்டுத் தலமாக நீண்ட காலமாக செயல்படும் கோவில்களுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது ஒரு பொறுப்-பான தலைவரின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால் இவர், மலாய் சமூகத்தி-னருக்கு இந்து வழிப்பாட்டு தலங்களின்மீது கோபத்தை ஏற்படுத்துவதற்காக, இந்து கோவில்களை இழிவு படுத்தும் விதமாக நோக்கத்தில் அவற்றை ‘ஹராம்’ என்று குறிப்பிட்டார். இந்து கோவில்களை அப்படிச் சொன்ன முதல் பிரதமர் இவர் மட்டும்தான் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன் வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
அன்வாரின் தூண்டுதலால், ஒரு சில ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், இந்துக் கோவில்களை ‘சுத்தம் செய்தல்’ என்ற பெயரில் இடையூறு செய்ய முனைந்தனர்; தனிப்பட்ட சிலர், தாங்களே சட்டத்தை கையில் எடுத்தனர். அப்படிப் பட்டவர்களை, ‘நண்பர்கள்’ என்று வெட்கமின்றி அழைத்தார் பிரதமர் அன்வார்.
இது, கடந்த 18 ஆண்டுகளாக அவருக்கு அரசியல் புனர்வாழ்வை வழங்கிவரும் இந்திய சமூகத்திற்கு இழைத்த மிகப்பெரிய துரோகம்.
2004 பொதுத் தேர்தலில் அன்வாரின் ‘கெ அடிலான்’-பிகேஆர் கட்சி ஒரேவொரு நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வென்றது; ஆனால் ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணியாலும் தன் அழைப்பினை ஏற்றும் 2008 பொதுத் தேர்தலில் இந்தியர்கள் அவருக்கு பேராதரவு அளித்தனர். ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்கள் பெருமளவில் பிரச்சாரம் செய்ததன் விளிவாகவே அவரின் தேர்தல் வெற்றி, 1 இடத்திலிருந்து 31 இடங்களுக்கு உயர்ந்தது; மேலும், ஜனநாயக செயல் கட்சி-ஜசெக, கூடுதலாக 17 இடங்களைப் பெற்றது; அதைப்போல, பாஸ் கட்சியும் நாட்டின் மேற்கு மண்டலத்தில் 15 இடங்களை கூடுதலாகப் பெற்றது. வரலாற்றில் முதல் முறையாக, சிலாங்கூர், பினாங்கு, பேராக், கெடா, நெகிரி செம்பிலான் ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆட்சியை அன்வாரின் கட்சித் தலைமையிலான மக்கள் கூட்டணி கைப்பற்றின என்பதை எல்லாம் இப்பொழுது அன்வார் மறந்துவிட்டு நன்றி மறந்தவராக செயல்படுகிறார் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இப்பொழுது, அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு கடுமையான சட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; அவர் சட்டவிரோதமாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும் அரசியலமைப்பு சாசனத்தைமீறி டிரம்ப்-உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் முக்கிய காரணங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, மலாய்ச் சமூகம் அவர்மீது முழுமையாக நம்பிக்கையை இழந்துள்ளது. மலேசியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு விற்றுவிட்டதாக பலர் கேள்வி எழுப்பும் அதேவேளை இவர் வகிக்கும் பதவியே ‘ஹராம்’ என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்
அதனால், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி கவனத்தை திசை திருப்பவும் மலாய் ஆதரவைப் பெறவும் அன்வார் செயற்கையாக மத சச்சரவை உருவாக்கி, மலாய்க்காரர் மற்றும் இந்தியர்களுக்கிடையே மத முரண்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்.
அன்வாரின் இத்தகைய ஏமாற்று நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்; மேலும், அவர் பிரதமராகத் தொடர தகுதியற்றவர் என்பதை இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சட்ட வல்லுநருமான பொன். வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.


