
பத்துமலை, ஜன.06:
ஜனநாயகத்தில் சிலகோளாறுகளுக்கும் இடமிருக்கிறது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் தோற்றவர் அமைச்சரவையில் இடம்பெறும் நிலையில், வென்றவர் வெளியில் இருக்கிறார். துணை அமைச்சர் க. சரசுவதி, தாப்பாவில் மண்டியிட்டவர்; மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.
அத்தகையவர், கண்ணாடி மாளிகையில் இருந்து கல்லெறியும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா கட்சியினர் இன்று ஜனவரி 6-ஆம் நாள் திங்கட்கிழமை, பத்துமலை திருமுருக திருத்தலத்தில் ஒன்றுகூடுகின்றனர்; அப்படியே வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர்.
இது விமர்சனத்திற்கு உரியதா அல்லதா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், இதுகுறித்து விமர்சிக்க மக்கள் நீதிக் கட்சிக்கும்(பிகேஆர்) சரசுவதிக்கும் தகுதி இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அரசியல் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும் எதிர்கொண்டிருந்த காலக்கட்டத்தில், நம் சமுதாயத்தினர் பலவேளைகளில் அவருக்காக வழிபாடு மேற்கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது, சரசுவதி அரசியல் எல்லைக்கு வெளியில் இருந்திருக்கலாம்; ஆனாலும் சமுதாய வீதியில்தானே உலா வந்தார்; இந்த சங்கதிகளையும் அறிந்தவர்தானே. அப்படிப்பட்டவர், அதுவும் பிகேஆர் கட்சியில் உதவித் தலைவராக இருந்துகொண்டு, மஇகா-வினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் குறித்து விமர்சிக்கிறார்; விமர்சிக்க்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை நிதானித்திருக்க வேண்டும்.


