
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, இன்று மார்ச் முதல் நாள், தமிழ் நாடு மாநிலம் முழுவதும் வாழ்த்து அலை எழுகிறது; கடல் கடந்தும் தமிழர் வாழும் நாடுகளில் இருந்தெல்லாம் குவியும் வாழ்த்து மழையில் நனைகிறார் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
மாநிலம் முழுவதும் அரசியல் தலைவர்கள், சமூக அமைப்பினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மு.க. ஸ்டாலின், தன் தந்தையும் ‘நினைவில் வாழும்’ முன்னாள் முதலமைச்சர் -திமுக தலைவருமான மு. கருணாநிதியின் அரசியல் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, சமூகநீதியை வலியுறுத்தும் அரசியல் பாதையில் பயணித்து வருகிறார். கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அவர் மேற்கொண்டுவரும் முயற்சியும் முனைப்பும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளன.

அவரின் தலைமையில், தமிழ்நாடு பல்வேறு நவீன திட்டங்களை அறிமுகப்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம், மருத்துவ சேவையில் மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முதலீடுகள் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மக்களின் நலனுக்காக அவர் காட்டும் அக்கறையும் தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத் கூறுகளுக்கு அவர் அளிக்கும் முன்னுரிமையும் மாநிலத்தின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. அரசியல் மட்டுமின்றி, சமூக மற்றும் பண்பாட்டு வெளியிலும் அவர் காட்டும் ஈடுபாடு, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் நோக்கத்தை உள்ளடக்கியது.

இன்றைய முதல்வரும் நாளைய முதல்வரும்
இந்த சிறப்பான நாளில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் எல்லையைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரின் வாழ்வு நீடித்து, தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் தொடர்ந்து வழிகாட்டும் நிலை நிலைத்திருக்கட்டும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 8:00 மணி அளவில் பேரறிர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதுடன் அவருக்கான இன்றைய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.


