
தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீக்கத்தை மாமன்னரிடமிருந்து அன்வார் இப்ராகிம் பெறாத நிலையில் அவர் பிரதமராக பொறுப்பேற்றது கேள்விக்கு-ரியது என்று அரசியல் சாசன அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், அந்த உண்மை எதிர்த் தரப்பு வழக்கறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலும் வழக்கு, செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால், பொன். வேதமூர்த்தி மேல்முறையீடு செய்கிறார்.
சட்ட வல்லுநரும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் (எம் ஏ பி) தலைவருமான பொன். வேதமூர்த்தி, அன்வார் இப்ராகிமிற்கு எதி-ராக அரசியல் சாசன ரீதியாக தொடுத்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி அன்வார் இப்ராகிம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, உயர் நீதி-மன்றம் கடந்த வாரம் மார்ச் 18-ஆம் நாள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
தேர்தல் வழக்காகத்தான் இத்தகைய வழக்கைத் தொடர்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி அலைஸ் லோக், எதிர்த் தரப்பினரான அன்வார் வழக்கறி-ஞர்கள் முன்வைத்த வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், பொன். வேதமூர்த்தி, அன்வாருக்கு செலவுத் தொகையாக வெ.80,000 செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
“சட்டம் அனைவருக்கும் சமமானது என்னும் அடிப்படையிலும் அரசியல் சாசனத்தின் மேன்மையை நிலைநிறுத்தவும் தான் தொடர்ந்த வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த முடிவால் தான் ஏமாற்றமடைந்தாலும், விசாரணையின் போது ஒரு முக்கியமான அம்சம் உறுதிப் படுத்தப்பட்டது. எதிர்த் தரப்பு வழக்கறிஞர், தன் வாதத்தின்போது ‘அன்வார் இப்ராகிம் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தகுதி நீக்கத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை’ என்பதை ஒப்புக்கொண்டார்.
இது, தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப் படுத்தும் முக்கியமான ஒப்புதல்” என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேத மூர்த்தி தெரிவித்துள்ளார்.
“அன்வார் இப்ராகிம் அரசியல் சாசனத்தின் 42ஆவது பிரிவின்படி மன்னிப்பு பெற்றார் என்பது உண்மை. ஆனால் அது 48(1)(e) பிரிவின்படி வழங்கப்படும் ‘முழுமையான’ மன்னிப்பாகாது. அதேபோல், 48(3) மாமன்னர் வழங்கும் (தேர்தலில் போட்டி-யிடுவதற்கான)தகுதி நீக்கத்தை அகற்றும் உத்தரவாகவும் அமையாது என்று மேலும் தெரிவித்த பொன் வேதமூர்த்தி,
தேர்தலில் போட்டி இடுவதற்கான தடை நீக்கப்படவில்லை என்றால், அவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான தகுதி குறித்து கேள்விகள் எழுகின்றன” என்றும் வலியுறுத்தினார்.
எனவே, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தனது சட்ட அணி-யிடம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருப்ப-தாகவும் உறுதிப்படுத்தினார்.


