
தமிழ் இணைய ஊடகமான தினத்தந்தியின் செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியன், கெடாவில் உள்ள ஒரு தொழிலக வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மார்ச் 30 திங்கட்கிழமை கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை, தினத்தந்தி இணையதலத்தின் இயக்குநர் பவளசெல்வன் மாரிமுத்து உறுதிப்படுத்தினார்.
கடந்த 26ஆம் நாள்(மார்ச்), சு.காளிதாஸ் மற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சில அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூலிம் ஹைடெக் பார்க் (KHTP) பகுதிக்கு சென்றிருந்தார்.
அங்கு 300க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் பணியாற்றுவதாக வந்த குற்றச்சாட்டு குறித்து செய்தி சேகரிக்கவே அவர்கள் சென்றதாக பவளசெல்வன் விளக்கினார்.
நாங்கள் தகவல் துறையில் பதிவு செய்யப்பட்டவர்கள்; அதிகாரப்பூர்வ ஊடக அட்டை எங்களிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட கைது நடவடிக்கையும் தடுத்து வைப்பும் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறினார்.
மேலும், இதற்கு முன்பே காளிதாஸை கூலிம் போலீசார் விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.
இதற்கு முன்னர் அவரை போலீசார் அழைத்து விசாரணைக்கு வரச் சொன்னார்கள். அது அத்துமீறல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையது என தெரிவித்தனர்.
ஆனால் இன்று அவர் காவல் நிலையத்துக்கு சென்றபோது மேலதிக விசாரணைக்காக கைது செய்ததாக கூறப்பட்டது என பவளசெல்வன் மேலும் கூறினார்.
இதே குற்றச்சாட்டில் மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். முத்தமிழ் மன்னன், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அதிருப்தி வெளியிட்டார்.
ஒரு செய்தியாளர் தனது கடமையை செய்ததற்காக கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரிடம் அதிகாரப்பூர்வ ஊடக அட்டை உள்ளது. அவரை கைது செய்யாமல் வாக்குமூலம் பதிவு செய்திருந்தாலே போதுமானது என அவர் தெரிவித்தார்.
மேலும், காளிதாஸை உடனடியாக எந்த தாமதமும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி பட்சிலிடம் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடமும் (KDN) கருத்து கோரப்பட்டுள்ளது.


