
மலேசிய இந்திய சமுதாயத்தை கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ஆக்கிரமித்துள்ள தீராத சிக்கல் ஆலய சிக்கல். தேசிய அளவில் பிரதிபலிக்கும் இத்தகைய பிரச்சனையை மலேசிய இந்து ஆலயங்களுக்கான ஒருங்கிணைப்புப் பேரவை மகிமா மேற்கொண்டுள்ள புதிய முயற்சி தீர்த்து வைக்குமா என்ற எதிர்பார்ப்பு பேரளவில் எழுந்துள்ளது.
சொந்த நிலத்தில் கட்டப்படாத இந்து வழிபாட்டுத் தலங்கள், சொந்த நிலத்தில் இருந்தாலும் ஆலயங்களில் நிர்வாக சிக்கல் தொடர்பாக தொடர்ந்து எழும் சலசலப்பு, போட்டி பொறாமையின் விளைவாக ஒரு நிர்வாகத்திற்கு எதிராக இன்னொரு நிர்வாகம் சண்டை இடுவது, காவல் நிலையத்திலும் சங்க பதிவகத்திலும் புகார் செய்து, ஆலய சிக்கல் பற்றி வெளி உலகுக்கு தெரிய வைப்பது, நிதி முறைகேடு, ஆலயத்தை சங்க பதிவகத்தில் பதிவு செய்யாதது உள்ளிட்ட ஏராளமான சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக மகிமா ஏற்பாட்டில் சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் அண்மையில் பத்து மலை திருத்தல வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கத்தின் நிறைவில் இத்தகைய அமைப்பை உருவாக்கி ஆலய சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கு தேசிய அளவில் முனைப்பு காட்டுவது என அதன் தலைவர் டத்தோ ந. சிவகுமார் அறிவித்தார்.
அப்போது மகிமா அமைப்பில் 200க்கும் மேற்பட்ட ஆலயங்கள் புதிதாக உறுப்பியும் பெற்றன. இந்த நிகழ்வு மகிமா அமைப்பின் முன்னெடுப்பையும் இதுவரை அது ஆற்றி வருகின்ற கடமையையும் ஆலயத் தரப்பினர் ஆதரிப்பதாகத் தெரிகிறது.
உண்மையில் இத்தகைய சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டால் அது மலேசிய இந்திய சமுதாயத்திற்கு, குறிப்பாக இந்து சமுதாயத்திற்கு இது ஒரு விடிவெள்ளியாக நிச்சயம் அமையும்.
அவ்வாறு அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!


