
பத்து மலை திருமுருகன் திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள பண்பாட்டு கலாச்சார மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தேவார திருமுறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் இளம் மாணவர்கள் கலந்து திருமுறையை கற்று ஓதுவதுடன் ஆன்மீக நெறியையும் கற்று சமயப் பாதையில் திறந்து விளங்கும் வகையில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி பிள்ளைகளோடு பெற்றோரும் ஆன்மீக நெறியை நாடுவதற்கு முதலில் நன்றி தெரிவிப்பதாக இந்த திருமுறை தேவார வகுப்பின் ஏற்பாட்டாளரும் ‘டி.எஸ்.கே’ சமூக அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவகுமார் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கலாச்சார மையத்தில் திருமுறை வகுப்புகள் பயிற்றுவிக்கப்பட்டாலும் இன்று முறைப்படி இந்த சமய வகுப்புகள் தொடக்கி வைக்கப்பட்து.

இன்றைய வகுப்பில் ஏறக்குறைய 50 இளம் மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில் அவர்களின் பெற்றோரும் இந்த திருமுறை வகுப்பு தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
“ஆறு மாத திருமுறை பயிற்சிக்குப்பின் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மாணவர்கள் தேவார திருமுறையில் முற்றும் உணர்ந்ததாக பொருள்படாது; பத்துமலை திருத்தல வளாகத்தில் நடைபெறுகின்ற இந்த வகுப்பில் கலந்து கொண்டவர்கள் என்பதற்கான அடையாளம்தான்” இந்த சான்றிதழ் என்று சிவகுமார் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய பொழுது சொன்னார்.

திருமறை வகுப்புகளுடன் வாரம்தோறும் சனிக்கிழமை இரண்டு முதல் மூன்று மணி வரை பரதக்கலை வகுப்பும் தொடர்ந்து சிலம்ப வகுப்பும் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதால் இதை பொதுமக்கள் ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிவகுமார் கேட்டுக்கொண்டார்.


