
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஏப்ரல் பதினொன்றாம் நாள் இந்து சமய அற நிலையத் துறை சார்பில் தங்க முதலீட்டு திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்து சமயம் மற்றும் அற நிலையத் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் இருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட பலவகை மாற்றுப் பொன் இனங்களில், திருக்கோவிலுக்கு பயன்பாடற்று பொன் இனங்களை உருக்கி கிடைக்கப் பெற்ற 1074 கிலோ, 123 கிராம் மற்றும் 488 மில்லி கிராம் சுத்த தங்கக் கட்டிகளை இந்திய தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அடையாளமாக திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் ஆகிய வழிபாட்டுத்தளங்களின் அறங்காவலர்க் குழு தலைவர்கள் வி எஸ் பி இளங்கோவன், கே எம் சுப்பிரமணியன், இணை ஆணையர்கள் ஏ.ஆர். பிரகாஷ், செ மாரிமுத்து, பி ரமேஷ், உதவி ஆணையர்/செயல் அலுவலர் இரா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் தங்க முதலீட்டிற்கான பத்திரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் துரைசாமி ராஜு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதி அரசர்கள் க. ரவிச்சந்திரன் பாபு, செல்வி ஆர் மாலா, சுற்றுலா பண்பாடு மற்றும் அற நிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி என் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி பழனி, பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஜோபி ஜோஸ் ஆகியோருடன் அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்களுடன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


