
சிரம்பான், ஜூலை 29 –
இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், மொழி, கலாசாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் மடானி அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, 2023 முதல் இந்திய சமூகத்தின் பல்வேறு முன்னேற்றத் திட்டங்களுக்காக வெ.597.5 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
அதில், மித்ரா அமைப்பின் மூலம் கல்வி மேம்பாடு, தொழில்முனைவோர் நலம் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக வெ.450 மில்லியன், MIED அமைப்புக்கு வெ.101 மில்லியன் மற்றும் நாடு முழுவதும் 344 இந்து ஆலயங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை வழியாக வெ.46.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
கல்வித் துறையில் மட்டும் வெ.182 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆறு தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கு வெ.30 மில்லியனும், 2023 முதல் 2026 வரை தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக வெ.130 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், TAFE கல்லூரிக்கு 2026ஆம் ஆண்டில் வெ.22 மில்லியன் வழங்கப்பட்டிருப்பது, 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வெ.2 மில்லியனை ஒப்பிடுகையில் பத்து மடங்குக்கும் அதிகமான உயர்வாகும் என்றார்.
சமூக வசதிகள் மற்றும் மின் தகன மேடைகள் அமைப்பதற்கு வெ.20 மில்லியனும், தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை வலுப்படுத்த இந்திய சமூகத் தமிழ் மாநாடு, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் தமிழ்மொழிக் கற்றல்-கற்பித்தல் உபகரணங்களுக்காக வெ.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தின் பொருளாதார வலிமையை உயர்த்தும் நோக்கில் AIM-இன் PENN திட்டம், தெக்குனின் SPUMI திட்டம், பேங்க் ராக்யாட்டின் BRIEF-i திட்டம், SME வங்கி மற்றும் மடானி VETI திட்டம் உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் மொத்தம் வெ.555.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஞ்தெரிவித்தார்.
இந்திய சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட வெ.597.5 மில்லியனும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வெ.555.6 மில்லியனும் சேர்த்து, மடானி அரசு இந்திய சமூகத்திற்கு வெ.1.15 பில்லியன் மதிப்பிலான ஆதரவை வழங்கியுள்ளதாக சிவமலர் கணபதி கூறினார்.
இந்நிதியில் STR, SARA, BUDI MADANI, குறைந்தபட்ச சம்பள உயர்வு, பள்ளி மாணவர் உதவித்தொகைகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் பொதுநலத் திட்டங்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றமும் இந்திய சமூகத்திற்கு பயனளித்துள்ளதாகக் கூறிய அவர், வேலையின்மை விகிதம் 2023ஆம் ஆண்டின் 3.4 விழுக்காட்டிலிருந்து 2025ஆம் ஆண்டில் 2.9 விழுக்காடாகக் குறைந்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் முதலீட்டு மதிப்பு வெ.329.5 பில்லியனிலிருந்து வெ.426.7 பில்லியனாக அதிகரித்திருப்பது வேலைவாய்ப்புகளையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், குறிப்பாக இந்திய வாக்காளர்கள் அரசியல் வாக்குறுதிகளை விட அரசின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் மதிப்பீடு செய்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான நெகிரி செம்பிலான் மடானி அரசுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் மீண்டும் ஆதரவு வழங்கினால், இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மொழி மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டறிக்கையை கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.


