
கோலாலம்பூர்,ஏப்.13-
இந்த சித்திரைப் புத்தாண்டு நம் இந்திய சமூகத்தினரின் குடும்பங்களுக்கு செல்வச் செழிப்பையும், நல்வாய்ப்புகளையும் அள்ளித் தர எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறினார்.
இந்த சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இந்திய சமூகத்தினருக்கும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
புதிய அரசியல் சூழ்நிலையை இந்திய சமூகம் இன்று எதிர்நோக்கியிருக்கிறது. அரசாங்கங்கள் மாறினாலும் நாம் எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 77 ஆண்டுகளாக தீவிர அரசியல் பணி ஆற்றிவரும் மஇகாவுக்கும் இது ஒரு சவாலான காலகட்டம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
அதை உணர்ந்துதான் இந்திய சமூகத்திற்காகத் தொடர்ந்து போராடவும், நம்முடைய பிரச்சனைகளுக்கு நாமே சுயமாக தீர்வு காணவும் முடிவு செய்து, அதற்கேற்ப பணியாற்றி வருகிறோம். கல்விதான் நம் சமூகத்தை முன்னேற்றுவதற்கான ஒரே வழி என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நன்குணர்ந்ததால் எம்ஐஇடி, எய்ம்ஸ்ட் ஆகிய அமைப்புகளின் மூலமும் டேஃப் கல்லூரி மூலமும் நம் இந்திய சமூகத்தின் கல்வித் தேவைகளை இயன்றவரையில் பூர்த்தி செய்து வருகிறோம்.
இதுவரையில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை கல்வி நிதியாக நாம் வழங்கியிருக்கிறோம். ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை, மருத்துவர்களை, பல்மருத்துவர்களை, மருந்தியல் பட்டதாரிகளை இன்று நம் சமுதாயம் கொண்டிருப்பதற்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம்தான் முக்கியப் பங்கை ஆற்றியிருக்கிறது.
சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தும் பொதுப் பல்கலைக்கழகங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு நாமே கல்வி உதவி நிதி வழங்கி எய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பயில வாய்ப்பு வழங்கியிருக்கிறோம்.
நம் நாட்டின் இந்திய சமுதாயத்தின் தலையாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ம.இ.கா. பெரிதும் பாடுபட்டு வருகிறது. மஇகா முன்வைந்திருக்கும் இந்திய சமூகப் பிரச்சனைகளைக் கனிவோடும், அக்கறையோடும் கவனிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
அந்த நம்பிக்கையுடன் நமக்கான பிரச்சனைகளுக்கு நாமே இயன்ற அளவில் தீர்வு காண முயற்சி செய்வோம் என்ற நோக்கத்துடனும் இந்த சித்திரைப் புத்தாண்டை உற்சாகத்தோடும், நன்மைகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்புடனும் கொண்டாடி மகிழ்வோம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


