
கோலாலம்பூர் ஏப்ரல் 15-
குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய அரசாங்கம் சிறப்பு மானியம் ஒதுக்க வேண்டும் என்று ஜசெக தேசிய உதவித் தலைவர் அருள்குமார் கூறினார்.
குறைவான மாணவர்களைகொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள் உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக தோட்டப் புறங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் இப்போது குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன.
இந்தியர்கள் அதிகம் வாழும் நகர்ப்புறங்களில் இந்த பள்ளிகள் இடம் மாற்றம் செய்ய அரசாங்கம் சிறப்பு மானியம் ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.
“இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் துணை கல்வி அமைச்சர் வோங் கா வா ஆகியோருடன் பேச்சு நடத்தி இருக்கிறேன்”.
பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளின் பெயர்ப் பட்டியலை அவர்களிடம் ஒப்படைத்தும் இருக்கிறேன்.
மாநில அரசுகளும் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கி வருவதுடன், தமிழ்ப் பள்ளிகள் இடமாற்றத்திற்கு நிலத்தையும் அடையாளம் கண்டுள்ளன.
அந்த வகையில் இந்தப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் பேசி ஒரு சிறப்பு மானியத்தை பெற்றுத் தரும்படி ஜசெக அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் இதன் தொடர்பில் அருள்குமார் கருத்து தெரிவித்தார்.
இன்று ஜசெக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது


