நேற்று இரவு முழுதும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா.

ணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த குளிர்ப் பிரதேசத்தைச் சூழ்ந்திருந்த வெப்பம் தணியத் தொடங்கியுள்ளது.

அனைத்து வடிவத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும் இந்த நிலை தொடரும் எனவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில், புது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணி அளவில் இந்திய DGMOவை அழைத்துப் பேசினார்.

அதன்படி, இரு தரப்பினரும் நிலம், வான் மற்றும் கடல் வழியான அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டைப் புரிந்துக் கொண்டு செயல்படுத்துமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியத் தரப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், மே 12 ஆம் தேதி மதியம் 12:00 மணி அளவில் மீண்டும் பேசுவார்” என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”இந்தியவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தரப்பினர் நேற்று
இரவு முழுவதும் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளன
என்று டிரம்ப்பின் சமூக வலைத்தள பதிவு தெரிவிக்கிறது.
“பொருத்தமான முடிவு எடுத்துள்ள இரு நாடுகளுக்கும் டொனால்ட் டிரம்ப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்

.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே அண்மையில் எழுந்த சிக்கல் குறித்தும் இருதரப்பு நலன் குறித்தும் இவ்விரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு நடத்தும்; ஆலோசிக்கும் என அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த விவகாரம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.


