
மலேசிய இந்து சங்கத்தின் நடப்பு தேசியத் தலைவர் அடுத்தத் தவணைக்கும் தொடர்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மலேசிய இந்து சங்கத்தை வழிநடத்திவரும் ‘திருநெறிச் செல்வர்’ தங்க கணேசன், ஒரு தவணைக் காலத்தை நிறைவு செய்ய இருக்கும் நிலையில், தான் தொடங்கிய சில பணிகள் முழுமை பெறாத நிலையில், அவற்றைத் தொடரவேண்டி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தவிர, மலேசிய இந்து சங்கம் மேலும் எழுச்சிபெறவும் மலேசிய இந்து சமுதாயம் புத்தாக்க மறுமலர்ச்சி காணவும் விரைவில் நடைபெற இருக்கின்ற 2025- தேசிய ஆண்டுக் கூட்டத்தில் புதுத் திட்டங்களை அறிவித்து, அவற்றையும் நிறைவேற்றி முடிக்க இருப்பதாலும் இன்னொரு தவணைக்கு தேசியத் தலைவர் பொறுப்பில்தொடர இருப்பதாக தங்க கணேசன் அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மே-18இல் நடைபெற்ற ஜோகூர் மாநிலப் பேரவைக் கூட்டத்தின்போது, இதன் தொடர்பில் அறிவிப்பு செய்து விட்டதாகவும் ‘ஸ்ரீகாசி சங்கபூசன்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்து சங்க மத்திய செயலவையிலும் இதன் தொடர்பில் ஒரு சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


