
அரசியல் ஆதாயத்திற்காக எந்தக் கட்சியோ அல்லது தலைவரோ சமயத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாட்சிமைசால் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமயத்தின் பெயரால் அவதூறுகளைப் பரப்பக்கூடாது; வெறுப்பைத் தூண்டக்கூடாது; குறிப்பாக, நாட்டின் அதிகாரப்படி சமயமான இஸ்லாத்தை அரசியல் ஆயுதமாக அறவேப் பயன்படுத்தக்கூடாதென்று கடும் நினைவுட்டல் செய்திருக்கிறார்.
வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஷரியா’வின் கொள்கைக்கு இணங்க மதிப்பீடு, நீதி, கனிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய நிர்வாகத்திற்கு அடித்தளமாக இஸ்லாம் இருக்க வேண்டும் என்று சுல்தான் இப்ராகிம் வலியுறுத்தி உள்ளார்.
“இஸ்லாம் என்பது வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான மதம். எனவே, எந்தக் கட்சியும் அல்லது தலைவரும் தங்கள் அரசியல் நலன்களுக்காக மதத்தைப் பயன்படுத்தவோ, அவதூறுகளைப் பரப்பவோ அல்லது வெறுப்பைத் தூண்டவோ கூடாது, இது இறுதியில் சமூகத்தைப் பிளவுபடுத்தும்,” என்றும் அவர் கூறினார்.
மலேசிய பன்னாட்டு வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் இஸ்லாமியப் புத்தாண்டு ஹிஜ்ரி 1447(2025)தொடர்பில் நடைபெற்ற தேசிய ‘மால் ஹிஜ்ரா’ கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, மாட்சிமைசால் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் மேற்கண்டவாறு கூறினார்.


