
பாடி பாடி உந்தன் பாதம் பணிந்தோம் முருகா என்னும் தலைப்பில் இன்று விடியற்காலை நான்கரை மணி அளவில் தொடங்கிய ‘பாடலரசி’ பண்பரசி குழுவினரின் திருப்புகழ் பாராயணப் பயணம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு படிக்கட்டில் ஒரு திருப்புகழ் என தொடங்கிய இந்த இறைநேசப் பயணம் ஏறக்குறைய நண்பகல் அளவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முனைவர் பண்பரசி கனிமொழி சங்கீத கலாலயம் சார்பில் பண்பரசி கோவிந்தசாமி, கனிமொழி கோவிந்தசாமி இருவரும் மேலும் இருபத்தியிரண்டு பாடகர்களுடன் திருப்புகழ் பாடிய வண்ணம் படியேறும் பயணம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனால் பத்து மலை திருமுருகன் திருத்தல வளாகம் இப்பொழுது பக்தி பரவசத்தில் திளைத்துள்ளது.
மலேசிய சாதனை புத்தகத்திலும் ஆசியான் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமுருக தமிழ் வழிபாடு, ஆன்மீக விழிப்புணர்வு, முழுமையான அர்ப்பணிப்பு எண்ணம் ஆகியவற்றை இலக்காக கொண்டு இந்த இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பண்பரசி தெரிவித்தார்.
இதன் தொடர்பில் நேற்று முன்னிரவில் பத்து மலை வளாகத்தில் உள்ள விநாயகர் ஆலய சிறு மண்டபத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் மகிமா அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவகுமார் தலைமையில் இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக விழா நடைபெற்றது.
இதன் நிறைவு விழா இன்று சனிக்கிழமை பகல் 12:00 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


