
கோலாலம்பூர் ஜூலை 19-
மலேசிய இந்து சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டால் 100 நாட்களில்
சங்கத்தின் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என்று கணேஷ் பாபு தெரிவித்தார்.
நாளை ஜூலை 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு மேல் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மலேசிய இந்து சங்கத்தின் 48 ஆம் ஆண்டு மாநாடும் தேர்தலும் நடைபெறுகிறது.
இம்முறை முக்கிய பொறுப்புகளுக்கு தங்க கணேசன் மற்றும் கணேஷ் பாபு தலைமையில் இரு அணிகள் போட்டியிடுகின்றன.
இதில் மறுமலர்ச்சி மாற்றுவோம் மாறுவோம் அணிக்கு கணேஷ் பாபு தலைமை ஏற்றுள்ளார்.

அதேசமயம் வெற்றி அணிக்கு தங்க கணேசன் தலைமை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று இரு தரப்பினரும் ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.
மலேசிய இந்து சங்கத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த புறப்பட்டு இருக்கும் கணேஷ் பாபு 9 அம்ச திட்டங்களை முன்னெடுத்தார்.
2002இல் மலேசிய இந்து சங்கத்தின் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டது.
இப்போது நான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் 100 நாட்களில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.

அதேசமயம் ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்ட ஆலயங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண போராடுவோம்.
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக மஇகா, மஹிமா உட்பட அனைத்து தரப்பினரிடம் இணைந்து பணியாற்றுவோம்.
மேலும் இந்திய சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அட்சயப் பாத்திரம் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்றும் அவர் சொன்னார்.
மதமாற்றம் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மூலம் ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காண்போம் என்று அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் மெட்ராஸ் கஃபே உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


