
பந்திங் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுங்கை சீடு தோட்டத்தில் உள்ள பழைய வீடுகளுககு தண்ணீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கின்ற தோட்டப் பாட்டாளிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
இத்தகைய நடவடிக்கை ஏழை எளியோர் மற்றும் நலிந்த மக்கள்மீது மறைமுகமாக ஏவப்படும் அடக்குமுறை என்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பா ராயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்
சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து விவரம் அறிந்ததோடு இப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கையையும் மேற்கொண்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தோட்டத்தின் நிருவாகம் இத்தொழிலாளர்களின் வீடுளுக்குக் கூட்டு அளவை கருவியை (மீட்டர்) பொருத்தியுள்ள காரணத்தால் ‘ஆயர் சிலாங்கூர்’ நிறுவனத்திற்கு குடிநீர்க் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையை இந்தப் பாட்டாளி மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தவிர, தண்ணீர்க் கட்டண நிலுவைத் தொகைக்கும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்திற்கும் இவர்கள் ஆளாகியிருப்பதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புப் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான பாப்பா ராய்டு சுட்டிக் காட்டினார்.
பி40 தரப்பினருக்காக மாநில அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்திவரும் இலவச குடிநீர்தா திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“இந்தச் செயல் அநீதியானது. மனிதாபிமானமற்றது. இதனால் தொழிலாளர்களுக்கு மேலும் சுமை ஏற்பட்டுள்ளது என்று பாப்பாராவ் டு ஆதங்கம் தெரிவித்துள்ளார்
தொகுதியின் மக்கள் பிரதிநிதி என்னும் முறையில் தோட்டத் தொழிலாளர்கள், மாநில அரசின் இலவச குடிநீர்தா திட்டத்தில் பங்கெடுக்கும் வகையில் வீடுகளுக்கு தனித் தனியே நீர் விரிவாக அளவைக் கருவிகளை (மீட்டர்களை)ப் பொருத்துவதற்கான செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் பாப்பாராய்டு இதன் தொடர்பில் தெரிவித்துள்ளார்.


