Tuesday, August 4, 2026

மஇகா 80ஆம் ஆண்டு விழா: ஷோதேசிய அளவில் பேச்சுப் போட்டி!

மஇகா(மலேசிய இந்தியர் காங்கிரஸ்)-வின் 80ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 123 தொகுதிகளில் ஒரே நாளில் பேரளவில் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ த. முருகையா அறிவித்துள்ளார்.

இந்தப் போட்டி வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை 9:00 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்து தொகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் மஇகா தலைமையகத்து நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.
விக்னேஸ்வரன் தொடக்கி வைக்கவுள்ளார்.

இதுகுறித்து டத்தோ முருகையா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்கெனவே கூட்டு பிரார்த்தனை, குடும்ப தினம், நெடுந்தூர ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, கல்வி ஈடுபாடு மற்றும் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நாடு தழுவிய அளவில் இந்த பேச்சுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்தப் போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவு என மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காக ஐந்து தலைப்புகளும், இடைநிலைப்பள்ளி மற்றும் பொதுப் பிரிவினருக்காக தனித்தனியாக ஐந்து தலைப்புகளும் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

இந்தப் போட்டி இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், மலாய் மற்றும் சீன சமூகத்தினருக்கும் கலந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும். அவர்கள் மலாய் மொழியில் உரையாற்றி போட்டியில் பங்கேற்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அவை பள்ளிகளில் வழங்கப்படும் இணைப் பாட நடவடிக்கைகளுக்கான (Co-curriculam) மதிப்பெண்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்டிக்கான நடுவர் குழுவில் தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் இடம்பெறவுள்ளனர். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்படும்.

இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் பேச்சுப் போட்டி, இளைஞர்களின் பேச்சாற்றலை வளர்ப்பதோடு பல இன மக்களிடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை