
நக்கீரன்
பெட்டாலிங் ஜெயா, நவ.27:
இந்து சமய மக்களுக்கு ஆன்மிக முனையங்களாகத் திகழ்பவை ஆலயங்கள்தான். அத்தகைய ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லாமல் இந்து மக்களை ஒருங்கிணைக்கும் சமூகக் கூடங்களாகவும் சேவை மையங்களாகவும் திகழ வேண்டும் என்பது மலேசிய இந்து சங்கத்தின் நீண்ட கால முழக்கம்.
இதை இன்னும் கூர்ப்படுத்தும் விதமாகவும் நாட்டில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் மலேசிய இந்து சங்கம் ஆலய மறுமலர்ச்சிக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறி செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்து ஆலயங்கள் சமுதாய அரணாக விளங்க வேண்டும்; சேவை மையமாகவும் ஆலயங்கள் விளங்க வேண்டும்; கலை-கலாச்சார-பண்பாட்டுக் கூறுகளை வளர்க்க துணைபுரிய வேண்டும்; ஆலயப் பொறுப்பாளர்கள் நிருவாகத் திறனும் சமயத் தெளிவும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்னும் நான்கு அம்சங்களை இலக்காகக் கொண்டு இந்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
தேசிய ஒற்றுமைத் துறை ஆதரவுடன் நடைபெறவுள்ள இந்த ஆலய தேசிய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி, பெட்டாலிங் ஜெயா, Starlight Banquet Hall-என்னும் இடத்தில் 30-11-2024 சனிக்கிழமை நடைபெற இருப்பதால், இதில் கலந்துகொள்ளும்படி அனைத்து ஆலய நிர்வாகத்தினரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.


