
கோலாலம்பூர் அக் 2-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட நீலநிற கடைகள் முற்றாக அகற்றப்படும்.
அதற்குப் பதிலாக வெள்ளை நிறத்திலான மைக்கி டேங் கூடார கடைகள் அமைக்கப்படும் என்று விலாயா மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹாவின் சிறப்பு அதிகாரி சிவமலர் தெரிவித்தார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி கடை விவகாரம் தொடர்பில் சிவமலர் இன்று பிரிக்பீல்ட்ஸ் வர்த்தக மையத்திற்கு வந்து நிலவரத்தை நேரில் பார்வையிட்டார்.
தீபாவளியை முன்னிட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் வியாபாரிகள் வழக்கமான வர்த்தகம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் நீல நிற எளிய கூடாரங்களை அமைத்து கொடுத்துள்ளது.

சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அங்கு இந்த கடைகள் போடப்பட்டுள்ளன.
இக்கடைகளால் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் இதனால் மக்கள் இங்கு வரமாட்டார்கள் என்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடைகளால் வர்த்தகம் பெரிதும் பாதிப்பதுடன் பலத்த காற்று வீசினால் இந்தக் கடைகள் காற்றில் பறந்து செல்லும் எனவும் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை முதல் கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசியபோது இந்த கடைகள் காற்றில் பறந்தன.

கூடாரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் மாநகர் மன்ற (டிபிகேஎல்) அதிகாரிகள் அக்கூடாரங்களை அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று வருகை தந்த சிவமலர் இந்த நீலநிற கூடாரங்களை அகற்றும்படி டி.பி.கே.எல். அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்தக் கடைகளுக்குப் பதிலாக வெள்ளை நிறத்திலான ‘மைக்கி டேங்’ கூடாரங்களை இரண்டு தினங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளே கேட்டு கொண்டிருப்பதாகக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள 118 கடைகளுக்கு 284 பேர் விண்ணப்பம் செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட 118 பேருக்கு தீபாவளி கடைகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன.
இங்கு காலங்காலமாக வியாபாரம் செய்து வருவதாகக் கூறும் 27 வியாபாரிகள் துன் சம்பந்தன் பிரதான சாலை வளாகத்தின் பின்புறம் அஜெண்டா சூரிய ஏற்பாட்டில் நடக்கும் தீபாவளி சந்தைப் பகுதியில் வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கினோம்.
ஆனால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
Jalan Ah Chong Tong சாலையோரத்தில் வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கியதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் கடைகளை வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்கினறனர்.
ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட்ட கடைகளை மற்றவர்களுக்கு எப்படி கொடுக்க முடியும் என்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தபொழுது
சிவமலர் வினவினார்.


