
ஒற்றுமை அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டாவது முறையாக அமைச்சரவை மாற்றம் இடம்பெற இருக்கிறது.
கூடிய விரைவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவிக்க இருக்கும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஒரு சிலர் இப்பொழுது வகிக்கின்ற பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்பது திண்ணம்.
அப்படிப்பட்டவர்களில் நிதி அமைச்சருமான பிரதமர் அன்வார், உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன், மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நென்சி சஷூக்ரி ஆகியோர் எவ்வித மாற்றமும் இன்றி தத்தம் பதவியில் தொடர்வர் என்று நூற்றுக்கு நூறு நம்பலாம்; இவர்களைப் போல இன்னும் அதிகமான அமைச்சர்களும் தத்தம் துறைகளில் தொடர வாய்ப்பு உண்டு.
இந்த வரிசையில் உள்நாட்டு வாணிகம்-வாழ்க்கை செலவினத் துறை துணை அமைச்சர் ஃபூசியா சாலேவும் ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் இணைக்கின்றனர் என்பது, இவ்விருவரும் இன்று காலையில் தத்தம் மேல்சபை உறுப்பினர்(செனட்டர்) பதவி தொடர்பில் இரண்டாம் தவணைக்காக பதவி உறுதிமொழி ஏற்றுக் கொண்டதிலிருந்து உறுதிஆகிறது.
அந்த வகையில் இவ்விரு பெண் துணை அமைச்சர்களும் பிரதமரின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதும் இதற்கு மாட்சிமைசால் மாமன்னர் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளதும் தெளிவாகிறது.


