
சுங்கை சிப்புட், ஈவுட் தமிழ்ப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த இருபது ‘பி-40’ குடும்பத்தினருக்கு மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசிய உதவித் தலைவரும், பேராக் மாநில ம.இ.கா. தொடர்புக் குழுத் தலைவருமான தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எம். இராமசாமி, அத்தியாவசிய உணவுப் . பண்டங்களை வழங்கினார்.
பள்ளி ஆசிரியர்களால் தெரிவு செய்யப்பட்ட இருபது பி-40 பிரிவு மாணவர்களின் குடும்பத்தினருக்கு இவ்வுணவுப் பண்டங்கள் வழங்கப்பட்டது.
இது ஒரு சிறு உதவியாக இருந்தாலும்
‘காலத்தினால் செய்த உதவி- சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’
என்னும் வள்ளுவர் வாக்கினைப் போல உரிய காலத்தில் கிடைக்கப்பெறும் எந்த உதவியும் அவ்வுதவியைப் பெறுபவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என தான்ஶ்ரீ எம்.இராமசாமி கூறினார்.

அந்த வேளையில், தொடர்ந்து பேசிய அவர், நான் எடுக்க வந்தவன் இல்லை, கொடுக்க வந்தவன் என்றார்.
மேலும், கல்வி மட்டும்தான் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். எனவே, நம் மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் தங்களால் இயன்ற வரையில் மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க மிகவும் பாடுபடுகின்றனர். அவர்களுக்கும் தன் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.
சிறந்த நிலையில் தேர்ச்சிப் பெற்று உயர்க்கல்வித் தொடர விரும்பும் இந்திய மாணவர்களுக்காக ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகமும், சுமாரான நிலையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்காக டேஃப் தொழில் திறன் கல்லூரியையும் ம.இ.கா. வழிநடத்திவருகின்றது.
அதுமட்டுமல்லாமல், எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனம் மூலம் கல்வியை உதவி நிதி, கல்வி கடனுதவி போன்றவற்றைவையும் ம.இ.கா. வழங்கிவருகின்றது. இது போன்ற வாய்ப்புகளை நம் இந்திய மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

சுங்கை சிப்புட் தொகுதித் தலைவர் வீ.சின்னராஜு, பேரா மாநில ம.இ.கா. பொருளாளர் மூக்கன், சுங்கை சிப்புட் தொகுதித் துணைத் தலைவர் மா.அஷோக்குமார், செயலாளர் கு.உமாபதி மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.


