
மேதகு என்னும் ஈழ வரலாற்று திரைப்படத்தை இயக்கிய, தமிழ்த் தேசிய இயக்குனர் தீ.கிட்டுவின் அடுத்த படைப்பான ஈழப் போராட்டத்தின் இணையற்ற ஈக வரலாற்றுப் பறைசாற்றும் ‘சல்லியர்கள்’ திரைப்படத்தை தமிழக திரையரங்க உரிமையாளர்கள் திரையிட மறுத்ததை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாக கண்டிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு திரைத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழர் அல்லாதவர்கள் திட்டமிட்டு தமிழ், தமிழர், தமிழர் வரலாறு சார்ந்த படைப்புகளை புறக்கணிப்பதையும் மெல்லமெல்ல அழிப்பதையும் உலகத் தமிழர்கள் கவனித்துக் கொண்டுதான் வருகின்றனர்.

அண்மையில் இத்திரைப்பட இயக்குனர் தீ.கிட்டு மற்றும் தயாரிப்பாளர் சுரேசு காமாட்சி ஆகியோர் திரையரங்கு கிடைக்காத வேதனையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததைக் கண்டு வேதனை அடைந்தோம். தமிழருக்கு எதிரான சிக்கல், தமிழ் படைப்புகளுக்கு எதிரான தடை என நடுவன் அதிகார மைய ஆதரவுடன் திட்டமிட்டு நிகழ்த்தி வருவோரை தமிழகத் தமிழர்கள் அடையாளம் கண்டு, அதைக் களைய வேண்டும் என்றார்.
ஈழப் போராட்ட யுத்தத்தில் மருத்துவப் பிரிவு போராளிகளின் உன்னதத்தை உலகுக்கு காட்டும் மாபெரும் வரலாற்றுப் படைப்பான ‘சல்லியர்கள்’ என்னும் திரைப்படம், தற்போது (OTT Plus) என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இது வெறும் திரைப்படம் அல்ல; ஈழ வரலாற்றுப் பாடம் என்பதை உணர்ந்து உலகத் தமிழர்கள் கண்டு வரவேற்று பேராதரவு தந்து வெற்றியடைச் செய்ய வேண்டுமாய் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் சார்பில் பாலமுருகன் வீராசாமி கேட்டுக்கொண்டார்.
தகவல்:
செ. வே. முத்தமிழ் மன்னன்.


