
தித்திக்கும் தைப்பொங்கலை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசின் தைப்பொங்கல்- தமிழர் திருவிழா வரும் ஜனவரி 17 ஆம் நாள் அம்பாங் டத்தோ அமாட் ரசாலி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன் ‘கித்தா சிலாங்கூர்’ (Kita Selangor) திட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
வரும் ஜனவரி 17 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, அம்பாங் ஜெயா, கம்போங் தாசேக் பெர்மாயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் முதல் தைப்பொங்கல் விழா நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை, அம்பாங், டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பொங்கல் தமிழர் திருநாள் திருவிழா அதிகாரப்படியாக நடைபெறும்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் பின் ஷாரி தலைமையில் நடைபெறுவுள்ள இவ்விழாவில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்க இருகின்றனர் என்று ஜசெக தலைவர்களில் ஒருவருமான பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இந்த விழாவில் டத்தோ இர். இஷாம் பின் ஹாஷிம் (சிலாங்கூர் உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர்), முகமட் ரஃபிஸி பின் ரம்லி (பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர்), புவான் ஹாஜா ரோட்சியா பிந்தி இஸ்மாயில் (அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்),, முகமட் கம்ரி, இயூ ஜியா ஹாவ், சையத் அகமட் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மலேசிய மடாணி (Malaysia MADANI) கொள்கையின்கீழ், பல்லின மக்களிடையே ஒற்றுமையையும் கலாச்சாரப் பெருமையையும் பறைசாற்றும் வகையில் இந்த தைப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 5,000 பேர் திரளாகக் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
தமிழர்களின் உன்னத விழாவாக தைப்பொங்கல் தமிழர் – திருவிழா விளங்குகிறது. அந்த வகையில் இவ்வாண்டு நடைபெறும் தைப்பொங்கல்- தமிழர் விழாவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெறும்.
மேலும் அனைவருக்கும் வாழை இலையில் சுவையான சைவ உணவு பரிமாறப்படும் என்றும் பாப்பா ராயுடு சொன்னார்.


