
பத்துமலை தைப்பூசம் விழாவையொட்டி, பத்து மலை ஆலய கழகத்தை ஒட்டிய சாலையோர கடைகளுக்கு வெ.4,000 முதல் வெ.18,000 வரை வாடகையா என கொதித்துள்ளனர் பண்டிகை கால சிறு வியாபாரிகள்.
பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு வழக்கமாக சாலை ஓரங்களில் அமைக்கப்படும்செலாயாங் நகரான்மை கழக (எம்பிஎஸ்) கடைகளுக்கான வாடகை, இம்முறை ஏல முறையில் வழங்கப்படுவது ஏன் என்றும் உடனடியாக இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீரமேஷ் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக இங்கு கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்துவரும் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த செயலை அவர் கடுமையாக சாடினார்.
கடந்த ஆண்டு இந்த கடைகளை வெ.400-500 வரை வாடகைக்கு எடுத்த சிறு வியாபாரிகளுக்கு இந்த முறை பெரிய ஏமாற்றம்தான். தற்போது இந்த கடைகள் ஏல முறையில் வெ.4,000 முதல் வெ.18,000 வரை வாடகைக்கு விடுப்படுகிறது.
இங்கு கடைகளை வாடகைக்கு எடுத்து சுமார் வெ.2 ஆயிரம் வரை லாபம் பெற்ற சிறு வியாபாரிகள் வாடகைக்கே குறைந்தது வெ.4 ஆயிரம் வரை செலுத்த சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என ஸ்ரீ ரமேஷ் தெரிவித்தார்.
செலாயாங் நகராண்மைக் கழகத்தில் மூன்று பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த விவகாரம் குறித்து இம்மூவரும் வாய் மூடி இருப்பது ஏன் என்றும் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த ஏல முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பத்துமலையில் கூடிய சிறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.


