
சோழப் பேரரசின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவராக வலம் வந்த இராஜ ராஜ சோழன், தமிழர்தம் பெருமையாக அடையாளமாக காலம் உள்ளளவும் கார்உள்ளளவரை நினைவுகூரப்படுவார்.
இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர்.
தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, சோழப் பேரரசை விரிவுபடுத்தி, கலை மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கினார்.

தஞ்சைப் பெரிய கோவிலை கட்டியவர் இவரே. இவரது ஆட்சிக்காலம் “தமிழகத்தின் பொற்காலம்” எனப் போற்றப்படுகிறது.
இராஜ ராஜ சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அண்மையில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் டெம்பள் ஆஃப் ஆர்ட்ஸ் பைனஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மாபெரும் விழா நடைபெற்றது .
இந்த விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த
சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி சிவம் அவர்கள் இராஜ ராஜ சோழனின் வரலாற்று பெருமையை பற்றி பேசினார்.

அதேபோல் மலேசியாவைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர் பாண்டித்துரை அவர்கள் கடாரம் கொண்டான் என்ற தலைப்பில் இராஜ ராஜ சோழனை பற்றி பேசினார்.
ம இகா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இராஜ ராஜ சோழன் ஒரு வரலாற்று நாயகன் மட்டுமில்லாமல் தமிழ் இனத்தின் மாபெரும் அரசனாக விளங்கியவர் என்று டத்தோஸ்ரீ சரவணன் தமது உரையில் குறிப்பிட்டார்.
இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்னமும் உலக வரலாற்றில் ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது என்றார்.
டத்தோ இராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் சிவஸ்ரீ அ.ப. முத்துக்குமார் மற்றும் இந்திரா மாணிக்கம் ஆகியோருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



