
மலரும் 2025-ஆங்கிலப் புத்தாண்டு, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நலமும் வளமும் அளிக்கும் நல் ஆண்டாக அமையட்டும் என்று மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்திற்கும் இந்த மலைத்திருநாட்டிற்கும் உள்ள தொடர்பு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குரிய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும் தோட்டப் பாட்டாளி சமுதாயமாக 3-ஆம் கட்டத்தில் வந்த நாம், தற்பொழுது 6,7-ஆம் தலைமுறைகளை எட்டியிருக்கும் இவ்வேளையில், கல்வி ஒன்றுதான் நம் சமுதாயத்திற்கான மீட்சி என்பதால், மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சியான மஇகா, நம் சமுதாயத்திற்கான கல்வி மறுமலர்ச்சியில் தன்னை முழுமையாக அற்பணித்துக் கொண்டுள்ளது.
மஇகா-வின் கல்விக் கரமான எம்ஐஇடி மூலம், டேஃப் தொழில்நுட்பக் கல்லூரி, பன்னாட்டுத் தரத்திலான எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்கியபின், தற்பொழுது, கிள்ளான் பள்ளத்தாக்கில் எய்ம்ஸ்ட் கல்லூரியையும் நிறுவிட மஇகா முயன்று வருகிறது என்னும் நல்ல தகவலை புத்தாண்டு பிறக்கும் இந்த வேளையில் சமுதாயத்திற்கு தெரிவிப்பதில் மஇகா மகிழ்ச்சி அடைகிறது.
கல்வி வளர்ச்சியுடன், வர்த்தக முனைப்பு, திட்டமிட்ட சீரான வாழ்க்கை முறை, சேமிப்பு ஆகிய சிந்தனையுடன் நாட்டின் அரசியல் சுழலுக்கேற்ப வாழ்க்கையை கட்டமைத்து முன்னேற்றப் பாதையில் அனைவரும் பயணிப்போம்.
எது எவ்வாறாயினும், மலரும் 2025 ஆங்கிலப் புத்தாண்டு, நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் வளப்பம், பொருளாதார முன்னேற்றம், அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றை கொண்டு வரட்டும் என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


