Monday, May 4, 2026

காஜாங், தாமன் கோப்பராசி கியூபெக்ஸ் மாரியம்மன் ஆலயப் பாதைக்கு வெ.3.3 மில்லியன்! -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு!!

காஜாங், தாமன் கோப்பராசி கியூபெக்ஸ் -இல் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயப் பாதைக்கு 3.3 மில்லியன் வெள்ளியும் தென் பெட்டாலிங் ஜெயா-PJS 4 பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு மாற்று நிலமும் வழங்கி சிலாங்கூர் அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ. பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார்

தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தின் நுழைவுப்பாதை தொடர்பான சிக்கல், 2009-ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக நீடித்து வந்தது. 1988-ஆம் ஆண்டிலேயே அந்த நிலம் ‘ஆலயப் பயன்பாட்டிற்காக’ பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், முறையான நுழைவுப்பாதை இல்லாததாலும் உரிய அனுமதி விதிமுறைகளைப் பின்பற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்களாலும் கட்டுமானப் பணிகள் பலமுறை தாமதமடைந்தன.

Made with LogoLicious Add Your Logo App

அங்கீகரிக்கப்பட்ட திட்டமிடல் அனுமதியின்படி (Planning Permission), ஆலய வளாகத்திற்கான நுழைவுப்பாதை சுங்கை லோங் சாலையிலிருந்து (Jalan Sungai Long) அமையும் சாலை இருப்பு (Road Reserve) வழியாக மட்டுமே அமைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள குடியிருப்பு சாலைகளைப் பயன்படுத்துவதற்கோ அல்லது தற்காலிக சாலைகளை அமைப்பதற்கோ முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏனெனில், அத்தகைய நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்வதுடன் பாதுகாப்புச் சிக்கலையும் உருவாக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இதற்கான இறுதித் தீர்வாக, சுங்கை லோங் சாலையிலிருந்து சுமார் 383 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு புதிய சாலையை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு வெ.3.3 மில்லியன் ஆகும்.

தொடர் முரண்பாடுகளைத் தவிர்க்கவும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்யவும், இப்பகுதியின் வருங்கால மேம்பாட்டுப் பணிகளுக்குத் துணையாக அமையவும் இப்பரிந்துரையே மிகவும் பொருத்தமான தீர்வாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய நில உரிமையாளர்களை உள்ளடக்கிய அந்தப் பகுதியின் மேம்பாடு, இச்சாலை கட்டுமானச் செலவிற்கும் பங்களிப்பை வழங்கும். Taman Desa Baru, Taman Koperasi Cuepacs குடியிருப்பாளர்கள், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் வருங்கால மேம்பாடுகள் என அனைத்துத் தரப்பினரின் இணக்கமான சூழலை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும் இது.

மேலும், இந்தப் புதிய சாலை அப்பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வழிவகை செய்யும்.

நேற்று காலை நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் (EXCO) கூட்டத்தில், இந்தப் புதிய சாலை கட்டுமானத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதனை விரைவாகச் செயல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், சாலை இருப்பு நிலங்களில் (Road Reserve) அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கவும், வருங்காலத்தில் இச்சாலையைப் பயன்படுத்தும் நில உரிமையாளர்கள் கட்டுமானச் செலவில் பங்களிப்பதற்கான முறையான வழிமுறைகளை (Mechanism) வகுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சிலாங்கூர் மாநில அரசாங்கம் இப்பிரச்சினைக்கு ஒரு விரிவான, சமநிலையான மற்றும் இறுதியான தீர்வை எட்டியுள்ளதால், அனைத்துத் தரப்பினரும் இந்த விவகாரத்தை மீண்டும் கிளற வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய மற்றொரு நிகழ்வாக, PJS 4 பகுதியில் JAIS-க்கு (சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை) ஒதுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மயான நிலத்தில், ஒப்பந்ததாரர்கள் தங்கள் பணிகளைத் தடையின்றித் தொடர, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்பதை மாநில அரசாங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

குறிப்பிட்ட அந்த நிலத்தில் அமைந்திருந்த ஸ்ரீ மகா மாரியம்மன் டேசா பெராங்சாங், ஸ்ரீ கோட்டை மதுரை வீரன் தாமன் டேசா ரியா மற்றும் பெட்டாலிங் டின் சீக்கியர் சங்கம் ஆகிய மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கு, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்ய முன்வந்துள்ளன.

மாநிலத்தின் இன நல்லிணக்கத்தைப் பேணும் நோக்கில், இந்த மூன்று வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினரும் இடமாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதைப் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அறியத்தருகிறோம்.

நிறைவாக இவ்விவகாரத்தை மிகுந்த கவனத்துடனும், நிபுணத்துவத்துடனும் (Professionalism), விவேகத்துடனும் கையாண்டு, ஒரு சுமுகமான தீர்வைக்காண உதவிய மாநில முதல்வர்-Menteri Besar, மாநிலச் செயற்குழு (EXCO) உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
பாப்பாராய்டு வீரமான் மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை