
திராவிடப் பெருநிலத்தின் தமிழிய பாங்கை அதன் பன்முகத்தன்மை குன்றாமல் காத்து நிற்கின்ற திராவிட இயக்கத்தின் பேராசிரியப் பெருந்தகை சுப. வீரபாண்டியனார் நாள்தோறும் ஒரு நிமிட செய்தி என்ற பெயரில் பல்வேறு கருத்துகளை நறுக்கென காணொளிக் காட்சிவழி பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று ‘மொழிஞாயிறு’ தேவநேய பாவாணரின் பிறந்த நாள் என்பதையும் அந்த ஒருநிமிட காணொளிக் காட்சி மூலம் பதிவுசெய்து உலகத் தமிழர்தம் நெஞ்சங்களில் பரவ விட்டிருக்கிறார்.
அந்தச் செய்தி இதோ அவருடைய வாய்மொழியில்.. !
1902-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் நாள் பிறந்த திராவிட மொழி நூல்ஞாயிறு தேவநேய பாவாணர் தமிழ் தேசியத்திற்கும்
தமிழுக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து என்று சொல்ல வேண்டும்.

ஆனால் அவரோ, தமிழ் இனத்தின் சொத்து என்று மூன்று பெரியவர்களை அடையாளம் காட்டுகிறார்.
அறவழி பெரியார் திருவள்ளுவர், தனித்தமிழ் பெரியார் மறைமலை அடிகள், தன்மான பெரியார் ஈவேரா என்கிற மூவருந்தான் தமிழ் இனத்திற்கு கிடைத்த பெரும் சொத்து என்கிறார்.
எதற்கு என்றால்,

பிராமணியம் என்னும் பெருங்கேடு, நஞ்சு நாவலம் முழுவதும் நலங்கெட பரவி பைந்தமிழ் திராவிட பழங்குடி மக்கள் நைந்தமை தடுக்க நல்மருத்துவராய் வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார் தெள்ளிய மூவரும் தென்னகம் தோன்றினர் என்கிறார்.

இன்றைக்கு பார்ப்பனக் கடப்பாரை கொண்டு திராவிடத்தை இடிப்போம் என்று சிலர் பேசும்பொழுது தமிழ் தேசியத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்தவர்களில் ஒருவரான பாவாணர் அந்த பிராமணிய கேட்டை – பிராமணிய நஞ்சை தகர்க்க வந்த கடப்பாரைகள் தான் வள்ளுவரும் மறைமலை அடிகளும் தந்தை பெரியாரும் என்று சொல்கிறார்..

மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றேயென்று கூறும் பாவாணர் மூன்று பேரையும் போற்றி புகழ்ன்றார்.
அத்தகைய பாவாணருக்கு என்று பிப்ரவரி 7 பிறந்த நாள்!



