
ஈரானின் மூத்த தலைவர் இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறிய தகவல் இப்பொழுது ஈரானிய அரச ஊடகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொமெய்னி, மரணத்தை ஈரானிய அரச தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொமெய்னி மரணத்திற்கு இரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இரானின் உச்சநிலை தேசிய பாதுகாப்புக் குழுவின் அறிக்கையுடன், ஈரானில் உள்ள பல அரசு ஊடகங்கள் அயதுல்லா கொமெய்னி மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
86 வயது அயதுல்லா எப்படி இறந்தார் என்பது குறித்தோ அல்லது அடுத்தத் தலைவர் யார் என்பது குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
தற்போது இரானின் அரசு தொலைக்காட்சி அலைவரிசையான ‘IRIN’ ஒளிபரப்பில் கொமெய்னி புகைப்படங்களுடன் பின்னணியில் குரான் ஓதப்படுகிறது.
முன்னதாக, அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கொமெய்னி மரணத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய இரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் குழுவின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார்.
கொமெய்னியின் ‘தியாகம் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு எழுச்சியின் தொடக்கம்’-ஆக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பல இரானிய நகரங்களைத் தாக்கின; இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அமெரிக்க அதிபர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் கொமெய்னி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், அலி கொமெய்னி மரணம் குறித்த செய்தி தவறானது என்றும், அது அமெரிக்க உளவியல் போரின் விளைவு என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக, இரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் கூறியது.
புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், டிரம்பின் தகவலை மறுத்து, “டிரம்ப் தவறான, புனைவு செய்யப்பட்ட செய்திகளைப் பரப்புவதாக குற்றம் சாட்டியது.
டிரம்ப், இதற்கு முன்பும் பல கட்டங்களில் இவ்வாறு செயல்பட்டு இருக்கிறார். அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று, மஷாத் நகரத்தின் வீழ்ச்சி குறித்து அவர் வெளிப்படுத்திய கூற்று ஆகும்;
இது பின்னர் ஆதாரமற்றது என்றும் வெறும் பரபரப்பான ஊடக அக்கப்போர் என்றும் உறுதி செய்யப்பட்டது.” என ஊடகம் மேலும் தெரிவித்தது..
“வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான கோமெய்னி இப்போது இறந்துவிட்டார்” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் இன்னும் தன்னுடைய ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கொமெய்னி மரணம், ஈரானிய மக்களுக்கு நீதி என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது இரான் மக்களுக்கு மட்டுமல்ல, கோமேய்னி மற்றும் அவரது ரத்தவெறிக் கும்பலால் கொல்லப்பட்ட அல்லது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு காயமடைந்தோ உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வாழும் அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி.” எனவும் பதிவிட்டுள்ளார்.
“அவரால் எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து தப்ப முடியவில்லை, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதுவும் செய்ய முடியாது.”
“இரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர்களது ஐ.ஆர்.ஜி.சி (புரட்சிகர காவல் படை), ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு கேட்கிறார்கள் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம்.
நேற்று இரவு நான் சொன்னது போல், ‘அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு கிடைக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும்.'”
“ஐ.ஆர்.ஜி.சி மற்றும் காவல்துறை ஈரானின் தேசியவாதிகளுடன் அமைதியாக ஒன்றிணைந்து, ஒரு பிரிவாக, நாட்டை அதற்கு தகுதியான மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும், ஏனென்றால் கோமெய்னி இறந்தது மட்டுமல்லாமல், நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது;
“ஏறக்குறைய ஒரே நாளில் அழிக்கப் பட்டுள்ளது”.
“இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதிக்கான நமது இலக்கை அடைய, வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு தொடரும்.”
இதற்கிடையில், கோமெய்னி மரணம் குறித்த கூற்றுகளைத் தொடர்ந்து, இரானிய நகரமான கராஜில் கொண்டாட்டங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கோமெய்னி மரணம் குறித்த செய்திகளுக்குப் பிறகு, கராஜில் சில இரானியர்கள் கொண்டாடுவதைக் காண முடிகிறது.
இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பதிவிடுவதற்கு முன்பே இது நிகழ்ந்தது.
இதற்கிடையில், ஈரானிய அதிகாரிகள் 40 பேர் உயிரிழந்ததாக உளவு மற்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது பல்வேறு இடங்களில் இருந்தனரா என்பது தெரியவில்லை.
இறந்தவர்களுள் ஈரானின் அதிஉயர் தலைவர் கொமெய்னி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


