
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒப்பந்தத் தொழிலாளியராக மலாயாவுக்கு வந்தபோது அன்றைய மலாயாவின் நுழைவாயிலாக இருந்த கிள்ளான் துறைமுக டெப்போ வளாகத்தில் எழுப்பப்பட்ட முதல் ஆலயம், அருள்மிகு தேவி கருமாரியம்மன் ஆலயம்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த பாரம்பரிய வழிபாட்டுத் தலமான இந்த ஆலயத்தை 10 ஆண்டுகள் மாநில அமைச்சராக இருந்த கணபதி ராவ் தற்காக்க தவறிவிட்டார் என்று மலேசியத் தமிழர் முன்னேற்ற இயக்கத் தலைவர் சேரன் குற்றம் சாட்டினார்.

ஆலயப் பிரச்சனைக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று வீர வசனம் பேசிய கணபதி ராவ், கடைசியில் அந்த ஆலயத்தை தற்காக்கத் தவறிவிட்டார்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் முறைப்படி அணுகியும் அந்த ஆலயத்தின் நிலம், பிகேஎன்எஸ் தொடர்பான ஒரு தனியார் மேம்பாட்டு நிறுவனத்திடம் மேம்பாட்டிற்காக கைமாற்றி விடப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மாநில ஆட்சிக குழு உறுப்பினராக இருந்தவர் கணபதி ராவ்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த இந்த பாரம்பரியமான வழிபாட்டுத் தளத்தை தற்காப்பதாக வாக்குறுதி அளித்த கணபதி ராவ் இந்த கடமையில் இருந்து தவறிவிட்டார் என்று சேரன் குற்றம் சாட்டினார்.

ஆலய நிலத்தை தற்காப்பதாகக் கூறிய கணபதி ராவ், மாநில அமைச்சரவை உறுப்பினராக இருந்தும் வாக்களித்தபடி செயல்படவும் முக்கியமான ஆலயத்தை தற்காக்கவும் தவறிவிட்டார்.
காட்டைத் திருத்தி நாட்டை வளமாக்கிய தமிழர்களுக்குரிய வழிபாட்டுத் தலத்தைத் தற்காக்க தவறிய கணபதி, இப்போது அதைப் பற்றி பேசவும் சம்பந்தப்பட்ட-வர்களை சந்திக்கவும் மறுக்கிறார்.
இது, மலேசிய இந்து சமுதாயத்திற்கும் தமிழர்களின் வழிபாட்டு முறைக்கும் இழைக்கின்ற துரோகம் என்று கடுமையாக சாடியுள்ளார்.
பத்து ஆண்டுகள் மாநில அமைச்சராக இருந்த கணபதி ராவ் இப்பொழுது இதே ஆலயம் அமைந்துள்ள கிள்ளான் நாடாளு மன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார். இருந்தபொழுதும் இந்த ஆலய நிலத்தை தற்காக்க கடுகளவும் செயல் படவும் உதவி செய்யவும் மறுத்து வருவதாக கடுமையாக சாடினார் சேரன்.

தற்பொழுது கணபதி ராவின் தம்பி பாப்பா ராய்டு மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கிறார்.
இவரும் தன் அண்ணன் வழியிலேயே செயல்படுகிறார். நிலப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்த ஆலயத்தை தற்காப்பதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை; இது குறித்து நேரில் சந்தித்து விளக்கமோ உதவியோ பெறலாம் என்றாலும் சந்திக்க மறுக்கிறார் என்று இதன் தொடர்பில் மாநில முதலமைச்சர் -டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியிடம் புகார் மனுவை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசியபொழுது சேரன் மேலும் தெரிவித்தார்.


