
கார்ப்பரேட் நிறுவனம் சார்ந்த ஓரு சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக மக்கள் நீதி கட்சி-பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேரம் பேசப்பட்டதாகவும் இதன் தொடர்பில் வெ. ஒரு கோடியில் பேரம்படிந்த நிலையில் வெ.95 இலட்சம் மூன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட சிக்கல் தீர்ந்ததும் மீது ஐந்து இலட்சம் வெள்ளியை கொடுப்பது என்றும் தொடக்கத்தில் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் வாக்குறுதி அளித்தபடி சிக்கலும் தீர்த்து வைக்கப் படவில்லை; பணத்தையும் திருப்பித் தர மறுக்கிறார் அந்த ‘R’ என்ற அடையாளத்தைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்று மூன்று தினங்களுக்கு முன்பு விக்டர் ச்சின் என்ற வர்த்தகப் புள்ளி தெரிவித்திருந்தார்.
‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி, “நான் இல்லை அந்த எம்பி” என்று உடனடியாக மறுத்துவிட்டார்.
அதேவேளை, டத்தோஸ்ரீ ஆர்.ரமணனோ, இதன் தொடர்பில் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில், நானும் இல்லை அந்த ஆர் என்ற அடையாளத்தைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்று அறிவித்தார்.
இந்த விவகாரத்தை கொளுத்திப் போட்ட விக்டர் ச்சின், மார்ச் முப்பதாம் நாள்வரை பொறுத்திருப்பேன்; அதுவரை முடிவு தெரியாவிட்டால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை ஊருக்கும் உலகுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் என்றும் அறிவித்திருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் மார்ச் 30ஆம் நாள் திங்கள்கிழமையோ அல்லது அதற்கு முதல் நாளோ மலேசிய அரசியலில் ஒரு பெரும் பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்போதே அது வெடித்து விட்டது.

மடாணி முழக்கத்துடன் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர் அன்வாரின் மகளும் மக்கள் நீதிக் கட்சி- பிகேஆர் துணைத் தலைவருமான நூருல் இஸா திடீரென்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி இருப்பதற்கும் ‘ஆர்’ என்று அடையாளத்தை கொண்ட எம்பி பிரச்சனைக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது அடுத்தடுத்து தெரியவரும்.
ஒன்று மட்டும்தான் நெருடலாக இருக்கிறது. மலேசிய அரசியலில் மறுமலர்ச்சி முழக்கத்தை முன்வைத்து ஏறக்குறைய கால் ஆண்டுகால அரசியலுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த பிகேஆர் கட்சியின் மறுமலர்ச்சி நாயகி(Putri Refomaai) என்று வருணிக்கப்பட்ட நூருல் இஸாவின் அண்மைக் கால அரசியல் நடவடிக்கை யாவும் மிகவும் தமுக்கமாக இருக்கிறது என்பதுதான் வியப்பிலும் வியப்பாக இருக்கிறது!
இதற்கெல்லாம் காலமகள் நிச்சயம் விடை தருவாள்!.


