
வல்லரசான அமெரிக்காவால் மேற்கு ஆசியாவில் தூண்டப்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, மலேசியா உட்பட பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்காவிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை மலேசியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனபிகேஆர் சிலாங்கூர் மாநிலத் தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தினார்.
போர் மற்றும் பொருளாதாரத் தடைகளின் விளைவுகள் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.
மாறாக வளரும் நாடுகளை அவர்கள் தாங்கிக் கொள்ளத் தேவையில்லாத ஒரு பொருளாதார நிலையற்ற தன்மைக்குள் இழுத்துச் செல்கின்றன.
“மற்ற நாடுகள் சந்தித்த பொருளாதாரத் தாக்கத்திற்கு இழப்பீடு வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு அமெரிக்கத் தூதரகம் மூலம் கோருவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்று அவர் சொன்னார்.
“அப்பாவி மூன்றாம் நாடுகள் மீதான எதிர்மறையான தாக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல், வல்லரசுகள் மோதல்களைத் தூண்ட அனுமதிக்கப்படக்கூடாது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், மலேசியர்களுக்கான பல முக்கியமான தாக்கங்களைச் சுட்டிக்காட்டினார்.
இந்த போரினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிக அளவில் ஏற்றம் கண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு பல நாடுகள் ஆளாகி வருகின்றன.
வர்த்தக மற்றும் பொருளாதாரம் பாதிப்பால் பல நாடுகளில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
செய்தி: செ. வே. முத்தமிழ் மன்னன்


